Header Banner Advertisement

அரிசி வடாம் செய்முறை


001

print

மிஷினில் அரைக்கும் வசதி இல்லாதவர்களும் சுலபமாக இந்த முறையில் அரிசி வடாம் செய்யலாம்.

அரிசி வடாம் – 1

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 4 கப்
ஜவ்வரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 10
உப்பு
பெருங்காயம்
எலுமிச்சைச் சாறு

செய்முறை:

முதல்நாள் இரவே அரிசி, ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம், இரண்டு பங்கு தண்ணீரில் ஊறவைக்கவும்.

அத்துடன் மேலும் ஒரு பங்கு தண்ணீர், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் மிக மிக நைசாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தில் மேலும் 3 பங்கு தண்ணீர் வைத்து, சுட ஆரம்பித்ததும், அரைத்த அரிசிக் கலவையைக் கொட்டி, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும்.

கட்டிகளாகச் சேர்ந்து வரும். பயப்படத் தேவையில்லை. மேலும் கிளறிக்கொண்டே இருந்தால் நன்கு வெந்து நிறம் மாறி சேர்ந்தாற்போல் கெட்டியாக வந்தபின் மூடிவைத்து, அடுப்பை அணைக்கவும்.

மறுநாள் காலை எலுமிச்சைச் சாறு கலந்து, தண்ணீரில் மோர் கலந்து தொட்டுக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் தேவைப்படும் வடாம்களைப் பிழிந்துகொள்ளவும்.

நன்கு காயவைத்து எடுத்துவைத்து தேவைப்படும்போது பொரித்துக் கொள்ளவும்.

மிச்சமுள்ள நீர்மோரைக் கலந்தே கலவையை லேசாக மட்டும் நெகிழ்த்தி, ஒரு ஸ்பூனால் வில்லைகளாகவும் செய்துகொள்ளலாம்.

==========================================================

அரிசி வடாம் – 2

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 4 கப்
ஜவ்வரிசி – 1 கப்
பச்சை மிளகாய் – 4
உப்பு
பெருங்காயம்
எலுமிச்சைச் சாறு

செய்முறை:

பச்சரிசியைத் தண்ணீரில் களைந்து நிழலில் உலர்த்தி, முக்கால் பதம் காய்ந்ததும் (பிடித்தால் பிடிக்கவரும், உதிர்த்தால் உதிர்க்க வரும்) ஜவ்வரிசியைச் சேர்த்து மிஷினில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவில் ஒரு கப் மாவிற்கு 6 கப் தண்ணீர் என்ற அளவில் அடிகனமான பாத்திரத்தில் போட்டு கட்டிகளில்லாமல் கலக்கிக் கொள்ளவும்.

அரைத்த விழுதையும் சேர்த்து அடுப்பில் வைத்து நிதானமான தீயில் நன்றாக மாவு வெந்து நிறம் மாறி, குழம்பாகச் சேர்ந்து வரும் வரை கிளறி இறக்கவும்.

விரும்பினால் எள் அல்லது சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.

இறக்கியபின் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும்.

பிளாஸ்டிக் பேப்பரில் ஒவ்வொரு கரண்டியாக மாவை வைத்து அப்பளம்போல் பெரிய வட்டங்களாக இழுத்துக் கொள்ளவும்.

வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துப் பொரிக்கவும்.

அரிசி அப்பளம் போல் இருக்கும்.