
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு முன்பு அவர்களுக்குள் நாட்டை பிரித்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. தங்கள் மூவருக்கும் பொதுவான ஒருவரை வைத்து எல்லை பிரித்துக் கொள்ள விரும்பினர். எனவே, அம்பிகையை வேண்டி தவமிருந்தனர்.
அம்பிகை, அவர்களுக்கு காட்சி தந்தார். மூவேந்தர்களும் தாங்கள் ஆட்சி செய்ய வேண்டிய பகுதியை நிர்ணயம் செய்து தரும்படி வேண்டினர். அம்பிகை நாட்டை மூன்றாக பங்கிட்டு எல்லை வகுத்து தனித்தனியே பிரித்துக் கொடுத்தாள். அந்நாடுகள் அவர்களது பெயரிலேயே அழைக்கப்பட்டது. அப்போது மூவேந்தர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் அருளும்படி அம்பிகையிடம் வேண்டிக்கொண்டனர்.
அம்பிகையும் அவ்வாறே அருள் செய்தார். அப்போது சோழ மன்னன், தனக்கு பிரித்துக் கொடுத்திருக்கும் நாடு எப்போதும் செழிப்பாக இருக்க அருள வேண்டும் என வேண்டினான். அவனது கோரிக்கையை ஏற்ற அம்பிகை, காவிரி நதியால் அவனது நாடு எப்போதும் செழிப்புற்றிருக்கும் படி அருளினாள். சோழ மன்னனுக்கு அருள் செய்த அம்பிகை, இத்தலத்தில் செல்லாண்டியம்மனாக’ அருளுகிறாள்.