
வெகு ஆண்டுகளுக்கு முன்னர், பூந்தோட்டமாகத் திகழ்ந்த இவ்விடத்தில், அம்மன் எழுந்தருளியதாலும் சாத்வீகமான பூப்போன்ற புன்னைகையுடன் திகழ்வதாலும் பூங்காளி என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.
அன்னை காளி, அமைதியே உருவாகக் காட்சிதரும் கோயில் ஒன்று, மலைக்கோட்டை மாநகரில் தில்லைநகர், தென்னூர், புத்தூர், உறையூர் ஆகிய ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இருள் போக்கும் ஒளியாகத் திகழும் தேவி பூங்காளி அம்மனாக புன்னகை தவழும் முகத்துடன் இங்கே அருள்புரிகின்றாள்.
தலச் சிறப்பு
கருவறையில் அம்பாள், இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அலங்காரமாய் அருள்பாலிக்கிறார். ஒரு கையில் தாமரைப் பூவும் தாங்கி மற்றொரு கையை இடது தொடை மீது வைத்தவாறு, சாத்வீகமாகத் திகழ்வது தலத்தின் சிறப்பாகும்.