
பிரம்மதேவன் தான் செய்து வரும் படைப்புத் தொழிலைப் பெருக்க பத்து புதல்வர்களைப் பெற்றான். அப்புதல்வர்களுள் ஒருவனே தட்சன். இவன் சிவபெருமானைக் குறித்து ஆயிரம் ஆண்டுகள் கடுமையாக தவம் புரிந்து ஏராளமான வரங்களைப் பெற்றான். அந்த வரங்களுள் ஒன்று உமா தேவியைத் தனது மகளாக அடைந்து அவளை சிவபெருமானுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது.
அந்த வரத்தின்படி இமய மலைச்சாரலில் காளிந்தி நதியில் வலம்புரிச் சங்கு உருவில் தவம் புரிந்து கொண்டிருந்த உமா தேவியை, தட்சன் கண்டான். அவன் அந்த சங்கினைக் கையில் எடுத்த மறுகணம், சங்கு வடிவம் நீங்கி அழகிய பெண் குழந்தையானாள் உமா தேவி. அவளை எடுத்து வந்து தாட்சாயணி என்ற பெயரைச் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தான் தட்சன். தனது ஆறாவது வயது முதலே சிவபெருமானைத் தனது கணவனாய் அடையும் நோக்குடன் ஊருக்கு வெளியே ஒரு தவமாடத்தை அமைத்து சிவபெருமானைக் குறித்து கடுமையாக தவம் இருக்கத் தொடங்கினாள் உமாதேவி. அவளது தவத்திற்கு மெச்சிய சிவபெருமான், கூடிய விரைவில் அவளை மணம்புரிவதாய்க் கூறி மறைந்தார். அவர் கூறியது போல் தட்சன் கன்னிகா தான மந்திரங்களைக் கூறி அம்பிகையின் கரத்தை சிவபெருமானின் கரத்தில் வைத்து தத்தம் செய்தான்.
அடுத்த கணம் சிவபெருமான் திடீரென மறைந்தார். அதனால் கோபம் கொண்ட தட்சன், சிவனை கொடிய வார்த்தைகளால் தூற்றினான். பின்னர் உமாதேவி முன்னிலும் கடுமையான தவம் புரிந்ததால் மனம் இளகிய சிவபெருமான், அவள் முன் தோன்றி அவளைத் தனது பக்கத்தில் அமர்த்திக் கொண்டு மறைந்தார். இதனைக் கண்ட சேடிப் பெண்கள் நடந்தவற்றை தட்சனிடம் சென்று உரைத்தனர். தந்தையான தனக்குத் தெரியாமல் தனது மகளை களவு கொண்டவன் என்றும், தம் குலத்திற்கே இழிவைத் தேடித் தந்தவன் என்றும் சிவபெருமானை பலவாறாக இகழந்தான் தட்சன். ஒருநாள், அவன் தனது மகளைக் காண கயிலயங்கிரிக்குச் சென்ற போது வாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்த பூதகணங்கள் சிவபெருமானை இகழ்ந்த காரணத்தால் அவனை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். அதனால் கோபம் கொண்ட தட்சன் தன் இடத்திற்குத் திரும்பினான். பின்னர் ஒரு சமயம் கங்கை ஆற்றின் கரையில் கனகலகம் எனும் இடத்தில் வேள்விச் சாலை நடத்தத் தீர்மானித்த அவன் தேவர்கள், முனிவர்கள் கந்தர்வ, கின்னர, கிம்புருடர்கள் என சகலரையும் அழைத்துவிட்டு சிவபெருமானை மட்டும் புறக்கணிந்தான்.
தந்தை தட்சன் செய்யும் யாகத்தினை நாரத முனி மூலம் கேள்வியுற்ற தாட்சாயிணி அவனது தவறை எடுத்துக் கூறி திருந்தும் நோக்குடன் சிவபெருமானிடம் மன்றாடி அனுமதி பெற்றுக் கொண்டு வேள்விச் சாலையை அடைந்தாள். அவளைக் கண்டதும் கோபம் தலைக்கேற கொடிய வார்த்தைகளால் இகழ்ந்தான் தட்சன். இதனால் கோபம் அடைந்த தேவி கயிலைக்குத் திரும்பினாள். தட்சனுக்கு அறிவு புகட்டும் வகையில் அந்த வேள்வியை அழிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். நீண்ட நேர சிந்தனைக்குப் பின் தட்சனது யாகத்தை அழிக்க ஒப்புக்கொண்டார் இறைவன்.
அவரது கண்டத்திலிருந்து கருத்த விஷத்தின் ஒரு கூறு அவரது நெற்றிக் கண் வழியாக குமாரனாக வெளிப்பட்டது. அந்தக் குமாரன் ஆயிரம் முகங்களும் இரண்டாயிரம் கரங்களும் அவற்றிற்கு உரிய ஆயுதங்களையும் உடையவனாய் இருந்தான். மணி மலைகள், ஆமை ஓட்டு மாலைகள், பன்றிக் கொம்பு மாலைகள், கபால மலைகள் ஆகியவற்றை அணிந்திருந்தான்.
சிங்க முகங்களைக் கோர்த்த மாலையுடன் பாம்பாலான கச்சம் அணிந்திருந்தான். அவரே வீரபத்ரன் ! சிவபெருமானின் மகனான வீரபத்ரனின் மனைவி, பராசக்தியால் உருவாக்கப்பட்ட பத்ரகாளி, இவ்விருவரும் இணைந்து தட்சனின் யாகத்தை அழித்தனர். அப்போது முதல் சிவனாரின் ஆசியோடு வீரமங்களக் கடவுளாக அருள்புரியலானார் வீரபத்ரர்.
தலச் சிறப்பு