
புத்தாண்டு மார்ச் மாதம் 1-ந் தேதிதான் பிறந்தது என்று கருதிய ரோமானியர்கள் அதையே ஆண்டின் முதல் நாளாகவும் கருதினர். ரோமானிய மன்னர்களில் கொஞ்சம் விவரமாக யோசித்த நுமா போம்பிலியஸ் என்பவர், 10 மாதமாக இருந்த ஆண்டில், கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றாக்கினார். அந்த முறைதான் இப்போதும் பின் பற்றப்படுகிறது. எனினும், ரோமானிய மன்னர்களிலேயே சிலர், பழையபடி ஆண்டுக்கு 10 மாதம்தான். அதுவும் மார்ச் மாதம்தான் முதல் மாதம் என்று கூறிவந்தனர். பின்னர் அதே ரோமர்கள், முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர்களை இட்டனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர்தான், ஜனவரி 1-ந் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதை, இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கி.மு. 46 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை, ஜுலியன் காலண்டர் முறை என அழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், பழைய மார்ச் 25 ஆம் தேதியை ஆண்டின் முதல் நாள் என்றனர்.
இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள், இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறினர். இயேசு பிறப்பில் இருந்துதான் காலண்டர் முறை தொடங்கியது என்றால், அவர் பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியில்தானே புத்தாண்டு தொடங்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர். அதன் பின்னர் டிசம்பர் 25 ஆம் தேதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக , 1500 ஆம் ஆண்டு வரை, ஆண்டின் முதல் தேதியில் பல குழப்பங்கள் நிலவின.
கி.பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். அதில் அறிவியல் பூர்வமான உண்மைகள் இருப்பதாக அறிய வந்ததை அடுத்து, உலகம் முழுவதும் கிரிகோரி யன் காலண்டர் முறை பின்பற்றப்பட்டது.
இந்த முறைப்படி, ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 500 ஆண்டுகளாகத்தான் எந்த மாற்றமும் இல்லாமல் ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1-ந் தேதியாக விளங்குவதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.