
print
![]() |
பஞ்சாப் விவசாயி |
மக்கள் ஒருஇடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்தல் என்பது பெரும்பாலும் பஞ்சம் தலைவிரித்து ஆடும் காலங்களில் நடைபெறும். ஆனால், மித மிஞ்சிய மனிதனின் ஆசைக் கூட குடிபெயர வைக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் பஞ்சாப் விவசாயிகள்.
இந்தியாவிலேயே விவசாயத்தில் செழுமையும் தன்னிறைவும் கொண்ட ஒரே மாநிலம் பஞ்சாப்தான். அப்படிப்பட்ட அந்த மாநில விவசாயிகள்தான் தங்களின் விளைநிலத்தை விற்றுவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவிற்கு சென்று குடியேறுகிறார்கள். இதன் பின்னணியில் செழுமையும் பேராசையும்தான் இருக்கிறது.
![]() |
கதிரடித்தல் |
பஞ்சாப்பில் விளைநிலங்களின் விலை நாளுக்குநாள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே போகிறது. அங்கு ஒரு ஏக்கர் விளைநிலம் 20 லிருந்து 30 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் போட்டிப்போட்டு இந்த நிலத்தை வாங்குகிறாகள். அவற்றை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்கிறார்கள். அதனால், இங்கு விவசாய நிலங்கள் எல்லாம் படுவேகமாக வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. அதிக பணத்திற்கு ஆசைப்படும் விவசாயிகள் தங்கள் சொந்த நாட்டில் உள்ள சொந்த நிலத்தை விற்பனை செய்துவிட்டு ஆஸ்திரேலியாவில் சென்று குடியேறி விடுகிறார்கள்.
ஆஸ்திரேலிய இந்தியாவை விட மூன்று மடங்கு பெரியது. இந்தியாவின் மக்கள் தொகை 128 கோடி என்றால் அங்கு 2.40 கோடிதான். அங்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. அங்கிருக்கும் விவசாயிகள் 500, 1000 ஏக்கர் நிலங்களை வைத்து பிரமாண்டமாக விவசாயத்தை செய்து வருகிறார்கள். அங்கு நிலங்களின் விலையும் மிகக் குறைவு.
![]() |
ஆஸ்திரேலியாவின் இயந்திர விவசாயம் |
பஞ்சாப்பில் 5 ஏக்கர் நிலத்தை விற்றால் போதும் ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கிவிடலாம். அங்கு 85 சதவீத விளைநிலங்கள் பயிரிடப்படாமல் சும்மாவே கிடக்கிறது. இந்தியாவில் இருந்து சென்று ஒருவர் ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினால் உடனே அந்த நாட்டு அரசு அங்கேயே வாழ்வதற்கான குடியுரிமையை வழங்கி விடுகிறது. ஏகப்பட்ட சலுகைகளை வழங்குகிறது. எப்படியாவது தங்கள் பூமியை உணவு உற்பத்தி களஞ்சியமாக மாற்ற துடியாய் துடிக்கிறது.
இந்தியாவோ நிலங்களை எல்லாம் வீடுகளாக கட்டி கான்கிரீட் காடாக நாட்டை மாற்ற போட்டிப் போடுகிறது. மேலும், பஞ்சாப்பில் விவசாயத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதிலும் பெரும் பிரச்சினை இருக்கிறது. சரி வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தலாம் என்றால் அவர்களின் நிலம் எல்லாம் சிறிது சிறிதாக இருக்கிறது. அதனால் இயந்திர வேளாண்மையும் அவர்களுக்கு ஏற்றதாக இல்லை. இதுவும் அவர்கள் வெளியேற ஒரு காரணம்.
ஆனால், ஆஸ்திரேலியா அப்படியல்ல. அங்கு நிலங்கள் எல்லாம் மிக மிகப் பெரியவை. அங்கு இயந்திரம் இல்லாமல் விவசாயம் என்பதே சாத்தியம் இல்லாதது. விதைப்பது முதல் அறுப்பது வரை எல்லாமே இயந்திரங்கள் தான். பண்ணை இயந்திரங்களை வைத்தே எல்லா வேலையையும் முடித்துவிடலாம். காய்கறி மற்றும் பழவகைகள் பயிரிட ஏற்றதாக அந்த மண் இருக்கிறது.
ஆஸ்திரேலியா விவசாயத்திற்கு ஏற்ற தேசம். விவசாயம் மட்டுமல்லாமல் அதன் உபதொழில்கள் ஆன பால் பண்ணை வைத்து, ஜெர்சி, ஹோல்ஸ்டீன், பிரீஸின் போன்ற உயர்ரக பசுக்களை வளர்க்கவும் ஏற்ற இடம். பஞ்சாபிகள் ஏற்கனவே கடுமையான உழைப்பாளிகள். கேட்கவா வேண்டும் தங்களின் சொந்த நிலங்களை விற்று விட்டு ஆஸ்திரேலியாவுக்கு பறக்கிறார்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் ஆஸ்திரேலியா ஒரு பெரிய பஞ்சாப்பாக மாறி உலக நாடுகள் அனைத்துக்கும் உணவளிக்கலாம்..!