
ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால் முதலில் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அந்த கட்டடத்தின் மொத்த வலிமையையும் அந்த அஸ்திவாரத்தையே நம்பி இருக்கிறது. ஆனால், இனி அஸ்திவாரமெல்லாம் தேவையில்லை. அந்த செலவை மிச்சப்படுத்துங்கள் என்கிறார் ஒரு கட்டடக் கலைஞர். இந்த வீடுகள் அல்லது கட்டடங்கள் மற்றவற்றை விட பலமாக இருக்கும் என்கிறார் அவர். அவரின் பெயர் யூரி விளாசங் என்பது.
இந்த முறையை பயன்படுத்தி ரஷ்யாவில் உள்ள ‘நோவோசிபிரிஸ்க்’ என்ற இடத்தில் குடியிருப்புகளை இவர் ஏற்படுத்தியுள்ளார். களிமண்ணும் மணலும் நிரம்பிய அந்த இடத்தில்16 மீட்டர் ஆழம் தோண்டினால் மட்டுமே அஸ்திவாரம் அமைக்க முடியும் என்று தீர்மானித்தார். ஆனால், 11 மீட்டருக்கு மேல் தோண்ட முடியவில்லை. கடும் பாறைதான் இதற்கு காரணம்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் 16 மீட்டர் ஆழத்திற்கு அஸ்திவாரம் தோண்டாமல் மண்ணை அழுத்தி கடினமாக்குவதன் மூலம் கட்டடம் உருவாக்கலாம் என்கிறார் விளாசங். மேலும், கட்டடம் மண்ணை அழுத்தும் போது மண் உறுதியாக இருந்து கட்டடத்தை தாங்கும் என்று தெரிவித்தார்.
விளாசங் கண்டுபிடித்த இந்த முறைப்படி 12 அல்லது 14 டன் எடைக் கொண்ட இரும்பு சிலிண்டரை ‘கிரேன்’ மூலம் தூக்கி வேகமாக கீழே விட வேண்டும். அப்படி செய்யும்போது 3 மீட்டர் ஆழத்திற்கு குழி ஏற்படும். அந்தக் குழியை மண் கொண்டு நிரப்ப வேண்டும். பின் மீண்டும் அந்த இடத்தில் கிரேன் மூலம் சிலிண்டரை தூக்கி கீழே இறக்க வேண்டும். இப்படி மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதால் மண் இறுகிவிடும்.
இந்த அதி அழுத்த சக்தியால் மண்ணின் கீழ் பரப்பில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டுவிடும். மண்ணுக்கு அடியில் உள்ள நீரே கட்டடங்கள் பலவீனம் அடைய காரணம். அதிக அழுத்தத்தின் காரணமாக நன்றாக இறுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டினால் அந்த மண் 300 டன் எடை கொண்ட வீட்டையும் தாங்கும் வலிமை பெற்றுவிடும். இதனால் இனி அஸ்திவாரத்திற்கு என்று அதிகமாக செலவு செய்யும் அவசியம் இருக்காது. வருங்காலத்தில் இப்படிப்பட்ட அஸ்திவாரம் இல்லாத வீடு அதிகமாக கட்டப்படும் என்கிறார் விளாசங்.
எப்படியோ வீடு பலமாகவும் நமக்கு செலவும் குறைந்தால் நல்லதுதான்.
![]() |
நோவோஸிபிரிஸ்கில் உள்ள பழமையான தேவாலயம் |