Header Banner Advertisement

இனி விவசாயம் இப்படியும் மாறலாம்..!


1020verticalfarms01

print
ஒரு காலத்தில் நெருப்பில்லாமல் உணவு சமைக்கமுடியும் என்று சொல்லியிருந்தால், சொன்னவரை பைத்தியம் என்று முத்திரை குத்தியிருப்பார்கள். ஆனால், இன்று பெரும்பாலான கிச்சனில் இண்டக்சன் அடுப்பு வந்து உட்கார்ந்து கொண்டது. அங்கு நெருப்பும் இல்லை, புகையும் இல்லை. ஆனால், சமையல் நடக்கிறது.

அதேபோல்தான் இப்போது நிலமில்லாமல் விவசாயம் செய்யலாம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், வருங்கலத்தில் இந்த தொழிநுட்பம் சர்வ சாதாரணமாக நடக்கும். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் படுஜோராக நடந்து கொண்டிருக்கின்றன.

நமக்கு விவசாயம் என்றாலே நிலம் வேண்டும். ஆனால் நிலத் தட்டுப்பாடு மிக்க ஜப்பான்காரர்கள் நிலத்துக்கு எங்கே போவார்கள். உணவு கண்டிப்பாக எல்லா மக்களுக்கும் வேண்டும். அதற்கு விவசாயம் வேண்டும். விவசாயத்திற்கு நிலம் வேண்டும். ஆனாலும் அங்கு நிலம் இல்லை. நிலமே இல்லாத விவசாயத்தை நடத்தினால் என்னவென்று சிந்தித்தார்கள். அதன் விளைவுதான் இந்த தொழிநுட்பம்.

இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்தது செயல்படாத நிறுவனம் ஒன்றை. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு கம்ப்யூட்டரில் ‘ஃபிளாப்பி டிஸ்க்’ என்ற ஒரு வஸ்து பயன்படுத்தப் பட்டது. இன்றைய மெமரி கார்டுகளுக்கெல்லாம் முன்னோடி அது.

டாக்குமெண்ட் ஃபைல்கள் சேமித்து வைப்பதில் பெரும் பங்காற்றியது. ஒரு பிளாப்பி டிஸ்கில் 2.88 எம்.பி. டாக்குமெண்டுகளை சேமித்துவைக்க முடியும். இன்றைய மெமரி கார்டுகளோடு இதை ஒப்பிட்டால் யானையோடு சித்தெறும்பை ஒப்பிடுவது போலத்தான்.

பின்னாளில் சிடி பயன்பாட்டுக்கு வந்தப்பின் இவற்றின் தேவை முற்றிலும் குறைந்து போனது. இவற்றை தயாரித்த நிறுவனங்கள் தொடர்ந்து மூடுவிழா கண்டன. அப்படி மூடிய ஃபிளாப்பி டிஸ்க் தயாரிப்பு கம்பெனியில்தான் இந்த நவீன விவசாயத்தை நடத்திக் கொண்டிருக்கிறது பிரபலமான தோஷிபா நிறுவனம்.

இந்த கம்பெனியின் உபயோகம் இல்லாத சேமிப்பு கிடங்குகளில்தான் இந்த விவசாயம் நடக்கிறது. முற்றிலும் அடைக்கப்பட்டு வெளிக்காற்று, வெப்பம், சூரியஒளி எதுவும் வராத இடத்தில் எல்லாமே செயற்கையாக உருவாக்கி விவசாயம் செய்யப்படுகிறது.

சூரிய ஒளிக்குப் பதிலாக ட்யூப்லைட் மற்றும் எல்இடி விளக்குகளை வைத்து சூரியஒளியில் கிடைக்கும் அத்தனை சமாச்சாரங்களையும் கொண்டு வந்து விடுகிறார்கள். மினரல் வாட்டர் போன்ற சுத்தமான நீர் செடிகளுக்கு பாச்சப்படுகிறது. காற்றுக்கூட கண்ட்ரோல் செய்யப்பட்டு சுத்தமான காற்றே தரப்படுகிறது. வெப்பநிலையும் செடிகளுக்கு உகந்த அளவில் கொடுக்கப்படுகிறது. மண்ணும் செயற்கை மண் மற்றும் தேங்காய் நார் துகள்கள்தான்.

இந்த முறையில் கீரை, தக்காளி, லெட்டுஸ் போன்ற காய்கறி செடிகளை வளர்கிறார்கள். இப்படி வளர்ப்பதால் பூச்சித் தாக்குதல் முற்றிலுமாக குறைக்கப்படுகிறது. ஒன்றன் மீது ஒன்றாக பல அடுக்குகள் வைத்து விவசாயம் செய்வதால் குறைந்த இடத்தில் அதிக பயிர் விளைவிக்கப்படுகிறது.

மருத்துவத்திற்கு பயன்படும் ‘லெட்டுஸ்’ இலைகள் ஒரு நாளைக்கு 8,400 என்ற கணக்கில் ஆண்டுக்கு 30 மில்லியன் இலைகள் என்று கணக்கிட்டு பயிர்செய்து வருகிறார்கள். இதன்மூலம் வருடத்திற்கு 100 மில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் என்று தோஷிபா தெரிவிக்கிறது. மேலும் மூலிகைகள் வளர்ப்புக்கு இந்தமுறை ஏற்றது என்கிறது.

இந்த விவசாய முறை மிகப் பெரிய வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். இந்த வெற்றி பெற்றதையடுத்து தற்போது ரஷ்யா போன்ற விவசாயத்திற்கு ஒத்துவராத கடுங்குளிர் நாடுகள் கூட இந்த தொழிநுட்பத்தில் விவசாயம் செய்ய முன்வந்திருக்கின்றன.

தற்போது கீரை தக்காளி போன்ற சிறிய வகை செடிகளை இந்த முறையில் வளர்க்கப்படுகின்றன. வருங்கலத்தில் மற்ற பயிர்களும் இந்த முறையில் வளர்க்கமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். எப்படியோ விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாக மாறிவரும் இந்தக் காலத்தில் இந்த நவீன விவசாயமுறை கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்! இதன் சாதக பாதகங்களை..!