மனிதனை விட ஓரறிவு குறைவாக இருக்கும் விலங்குகள் நம்மைவிட சாப்பாட்டு விஷயத்தில் புத்திசாலி. எலி, பூனை போன்ற விலங்குகள் என்னதான் கொலைப் பசியாக இருந்தாலும் உணவை உடனே சாப்பிட்டு விடாது, முதலில் முகர்ந்து பார்க்கும் தனக்கு சரியான ஆபத்தில்லாத உணவு என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே சாப்பிடும். ஆனால் மனிதன் அப்படியில்லை கிடைத்ததை எல்லாம் சாப்பிடும் ரகம்.

அப்படி சாப்பிட்ட உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றால் உடனே வயிற்றைப் புரட்டிக்கொண்டு வாயிலெடுத்து விடுகிறோம். இது ஒரு வியாதி கிடையாது. வியாதி வருவதற்கான முன்னெச்சரிக்கை. வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாக்கள் அல்லது ரசாயன வகைகள் புகுந்துவிட்டது என்பதை தெரிவிக்கும் எச்சரிக்கை செயல் அது.
வாயிலெடுக்கும்போது நம் உடலுக்குள் என்ன நடக்கிறது என்றால் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உணவோ, தேவையற்ற ரசாயனமோ வயிற்றின் இரைப்பைக்குள் நுழைந்துவிட்டால் அதனை உடனே கண்டுபிடிப்பது இரைப்பை சுவர்களில் உள்ள உணர்வு செல்கள்தான். இதுதான் நரம்புகள் மூலமாக மூளைக்குத் தகவலைத் தெரிவிக்கின்றது. இந்த தகவல்களைக் கொண்டு செல்லும் நரம்புக்கு ‘வேகஸ்’ என்று பெயர். மூளைக்கு தகவல் கிடைத்ததும், மூளை கட்டளைப் பிறப்பிக்கிறது. அதன்படி எடுத்துக்கொள்ளாத உணவை சிறுகுடல் ஒன்றரையடி உயரத்திற்கு மேல் நோக்கி தள்ளிவிடுகிறது. அது வாந்தியாக வெளியே வந்து விடுகிறது.

சிறுகுடலில் இருக்கும் சிறு பகுதிகள் அத்தனையும் சேர்ந்து சுருங்கி இரைப்பைக்குள் இருக்கும் தகாத உணவை வாயின் வழியாக வெளியே தள்ளியாக வேண்டும். அதற்கு ஜீரண மண்டலம் மட்டுமல்லாமல் அதற்கு சம்பந்தமே இல்லாத சிறுகுடலைச் சுற்றியிருக்கும் தசைகள் கூட சுருங்கி உணவை வெளியே தள்ளுவதற்காக உதவி செய்கிறது. தேவையில்லாத உணவை வெளியே தள்ளுவதாக வாந்தியெடுப்பது என்பதாக இருந்தாலும் கூட, இது ஒரு தடவை மட்டும் நடந்தால் தப்பில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு நாளிலே நாலைந்து முறைக்கு மேல் வாந்தி எடுத்தால் அது ஆபத்து. தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால் உடலிலிருக்கும் நீரின் அளவு குறைந்து போய்விடும். இதனால் ரத்த அழுத்தமும் குறைந்துவிடும்.
உடம்பில் இருக்கும் நீர் மற்றும் திரவங்களின் அளவு குறையும்போது நம் உடலில் உள்ள கோடான கோடி செல்களுக்கு இடைப்பட்ட இடத்தில் இருக்கும் தண்ணீரும் திரவமும் உடம்பை விட்டு வெளியேறுகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக செல்களின் உள்ளே இருக்கும் தண்ணீரும் திரவமும் செல்களை விட்டு வெளியே கிளம்பிவிடும். இதை ‘டி-ஹைட்ரேஷன்’ என்று கூறுகிறார்கள். ஒத்துக்கொள்ளாத உணவை என்றில்லை. பஸ்சில் செல்லும் போது கூட சிலருக்கு வாந்தி வருகிறது. பல்லி விழுந்த உணவை பார்த்த மாத்திரத்திலே பலருக்கும் வாந்தி வந்து விடுகிறது. சிலவகை வாசனைகள் கூட குமட்டும் உணர்வை ஏற்படுத்திவிடும். இவையெல்லாம் ஒவ்வாமை பட்டியலில் வருகிறது.

லேசான உடல்நல கோளாறினால் ஒருமுறையோ இருமுறையோ வாந்தி வருவது உடலுக்கு நல்லதே. உடலில் உள்ள நஞ்சு வெளியேற இயற்கை செய்யும் பாதுகாப்பு நடைமுறை. அதனால் அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. ஆனால், மூன்று நான்கு முறை தொடர்ந்து வாந்தி எடுத்தால் அது ஆபத்து. உடனடியாக மருத்துவரை பார்த்து மருத்துவம் எடுத்துக்கொள்ள வேண்டும்.