
print
எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத இக்கட்டான உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடந்து விடலாம். அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம்.
இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எண்கள் உள்ளன. காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை.
அவசர போலீஸ் உதவிக்கு 100
தீயணைப்புத் துறைக்கு 101
ஆம்புலன்ஸ் உதவிக்கு 102
(108 வருவதற்கு முன்பு இந்த எண்தான் இருந்தது)
போக்குவரத்து முறைகேட்டிற்கு 103
ஆம்புலன்ஸ் உதவிக்கு 108
குழந்தைகளுக்கான உதவிக்கு 1098
பெண்களுக்கான உதவிக்கு 1091
முதியோருக்கான உதவிக்கு 1253
மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 12700
ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 18001805512
என்று ஒவ்வொரு உதவிக்கும் ஒரு எண் உண்டு.
இவை அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வது மிகுந்த சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான எந்த அவசர உதவி எண்களும் பயன்படாது.
இன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது சர்வ சாதாரணமானதாக மாறிவிட்டது. அங்கு ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். அந்த எண்கள் 911, 112.
இந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவி மையத்திற்கோ சென்றடையும் படி அமைத்திருப்பார்கள். நமது தமிழகத்தில் 911, 112 என்ற எண்களை டயல் செய்தால் தானாக அவசர எண் 100-க்கு சென்று சேர்வது போல் அமைத்துள்ளனர். இந்த எண்ணிற்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்தால்கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள்.
இந்த அவசர எண்களை அழைக்க செல்போன்களில் பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் போனில் கீபேட் லாக் ஆகியிருந்தால் கூட 1, 2, 9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட, சிம் கார்டே இல்லாமல் இருந்தாலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்யமுடியும்.
எனவே, உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்க கூடிய 911, 112 எண்களை நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்பது நல்லது.