
செய்திகளை ‘உள்ளது உள்ளபடி’ தருவதுதான் ஊடக தர்மம். ஆனால், கொஞ்ச நாட்களாக காட்சி ஊடகங்கள் அந்த தர்மத்தை மீறி வருவதாக தெரிகிறது. அதற்கு பல காரணங்கள். இன்றைக்கு விளம்பரங்கள்தான் ஊடகத்திற்கு வருமானத்தை அள்ளித் தருகின்றன. இந்த விளம்பரங்கள் வரவேண்டும் என்றால் அதற்கு டி.ஆர்.பி. ரேட்டிங் வேண்டும். டி.ஆர்.பி. ரேட்டிங் வர அதிகமான பார்வையாளர்களை ஈர்த்தாக வேண்டும்.
அதற்கு சில பல அம்சங்களை சேர்த்ததாக வேண்டியிருக்கிறது. உள்ளதை உள்ளபடி சொல்வது என்பது சினிமாவில் ஆர்ட் ஃபிலிம் பார்ப்பது போல் கொஞ்சம் ‘போராக’ போகும். அதற்கு பதிலாக அதே கதையில் பாட்டு, நடனம், சண்டை, பஞ்ச் டயலாக் சேர்த்து மசாலா கலவையாக கொடுத்தால் படமும் விறுவிறுப்பாக போகும். அதிகமான மக்களும் பார்ப்பார்கள்.
செய்தியும் அப்படிதான். உண்மையான செய்தியை அப்படியே தந்தால் போரடிக்கும். அதற்குப்பதிலாக கொஞ்சம் மசாலாவை அதாவது பரபரப்பை சேர்த்துக் கொடுத்தால் செய்தியும் சுவாரஸ்யமாக இருக்கும். பார்வையாளர்களையும் ஈர்க்கும்.
பெங்களூரு கலவரத்தை பொறுத்தவரை ஊடகங்கள் ஆரம்பத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கலவரம் நடக்கின்றன என்று சொல்லி வந்தன. இப்போது வரை அங்கு அதேநிலைதான். கலவரங்கள் ஒருசில இடங்களில் மட்டுமே நடந்திருக்கின்றன. ஆனால், ஊடகங்கள் இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமை விட்டுவிட்டன. அதன் காரணமாக பெங்களூரே எரிந்து கொண்டிருப்பதாக நம்ப வேண்டியுள்ளது. இதுவும் ஊடக தர்மத்தை மீறும் செயல்தான். செய்தியில் பரபரப்பை கூட்டுவதற்காக இரண்டு வார்த்தைகளை நீங்கியதால் பெங்களூரே பற்றி எரிவதுபோல் ஒரு தோற்றத்தை அது தந்துவிட்டது. அதற்கு தோதாக வீடியோ காட்சிகளும் காட்டப்படுவதால் பெங்களூர் படுமோசம் என்று எண்ண வைத்தது.
இந்தநிலையில்தான் பெங்களூரில் இருக்கும் நண்பர்கள் சிலரை தொடர்பு கொண்டேன்.“பெரிய கலவரமா..?” என்று கேட்டேன். “நாங்க இருக்குற ஏரியாவுல எந்த கலவரமும் இல்லை. டிவி-யை பாத்துதான் கலவரம் நடக்கிறது என்பதையே தெரிந்து கொண்டேன்” என்றார் அவர்.
பெங்களூரின் வேறுப்பகுதியில் உள்ள மேலும் சிலரை தொடர்பு கொண்டேன். அவர்களும் இதையே சொன்னார்கள். ஒரு நண்பர் கொஞ்சம் காட்டமாக “நம்மாள்க திருந்தவே மாட்டாங்களா..! ஏன் கன்னடர்களை இப்படி போட்டு அடிக்கிறார்கள். தமிழ்நாடு முழுசும் கன்னடர்களை தேடி தேடி அடிகிறங்க. ஏன் இந்த கொலை வெறி..?”
“ராமேஸ்வரத்துல மட்டும்தான் அடித்திருக்கிறார்கள். வேறு எங்கும் எதுவும் நடக்கவில்லை. சென்னையில் சில ஹோட்டல்களை அடைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான் மற்றபடி கன்னடர்கள் மீது பெரிய தாக்குதல் ஒன்றும் இங்கு நடக்கவில்லை.” என்றேன்.
“அப்படின்னு நீ சொல்ற. நீயும் நானும் சொல்றத யார் நம்ப போறாங்க. டிவிக்காரன் சொன்னதாதானே நம்புவாங்க. இங்க கன்னட சேனல்கள் எல்லாம் தொடர்ந்து தமிழ்நாட்டில் கன்னடர்கள் தாக்கப்படுவையே காட்டுகின்றன. எப்படித்தான் இத்தனை வீடியோக்கள் அவர்களுக்கு கிடைக்கிறதோ தெரியவில்லை. இத தொடர்ந்து பார்க்கும்போது தமிழ்நாடு முழுவதுமே கலவர பூமியாகவே தெரிகிறது. எனக்கே இப்படியென்றால் கன்னடர்களுக்கு எப்படி இருக்கும்? ஏன் ஊடகங்கள் இப்படி கலவரத்தை தூண்டுகின்றன.” என்று முடித்தார்.
x”இங்கு தமிழ் சேனல்களும் அதையேதான் செய்கின்றன. தமிழர்கள் தாக்கப்படுவதை மீண்டும் மீண்டும் காட்டி வெறியேற்றுகிறார்கள்.” என்று முடித்தேன்.
அடுத்து ஒரு நண்பரை தொடர்பு கொண்டேன். அவர் தீவிர இனவாதம் கொண்டவர்.”கர்நாடகாவுக்கு அழிவு காலம் வந்திருச்சு. தமிழர்கள ஓட ஓட விரட்டி அடிக்கிறானுங்கோ. 1991 கலவரத்தையெல்லாம் மிஞ்சிருச்சு. 200 பஸ்ஸு, 500 லாரி, 1000 கார்களை கொளுத்திட்டானுங்கோ.” என்றார். நல்லவேளை எந்த ஊடகத்தின் காதுகளுக்கும் இது கேட்கவில்லை. கேட்டிருந்தால் இதுவே பெரிய செய்தியாகியிருக்கும்.
இது உணர்ச்சிவசப்பட்டு செய்தியை மிகைப்படுத்தி சொல்வது. முன்பு இப்படிப்பட்ட ஆதாரமற்ற தகவல்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காது. இப்போது அப்படியெல்லாம் கிடையாது. எதையும் செய்தியாக்க அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
இந்தநிலையில்தான் டிவியில் இன்னொரு காட்சி பரபரப்பாக வந்தது. ‘உயிருக்கு பயந்து தமிழர்கள் வெளியேற்றம்’ என்று. அந்த காட்சிகளை பார்த்ததுமே அதன் சூட்சுமம் புரிந்தது.
தமிழக-கர்நாடக எல்லையில் இருக்கும் ஊடக நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.”தமிழர்கள் எல்லாம் உயிருக்குப் பயந்து ஓடி வருகிறார்களா?” என்றேன். “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. மூணு நாள் சேர்ந்தாப்பல லீவு வந்தாலே நம்ம தமிழ் மக்கள் சொந்த ஊர்ப்பக்கம் கிளம்பிடுவாங்க. இப்போ கலவரம் வேற சேர்ந்துக்குச்சு. அதனால அது முடியற வரைக்கும் எல்லாம் ஊருக்கு போறாங்க. இது ரொம்ப சாதாரணமான நிகழ்வு.” என்றார்.
“நான் அந்த வீடியோவை பார்க்கும்போதே தெரிந்தது. மக்கள் சிரித்துக்கொண்டே சென்றார்கள். அப்போதே புரிந்து கொண்டேன். அப்பறம் ஏன் உயிருக்கு பயந்து வெளியேறுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்.” என்று கேட்டேன். “தலைவரே, உங்களுக்கு தெரியாததா..?” என்று கூறினார்.
மேற்கண்ட இந்த உரையாடல்கள் ஊடகங்களின் பரபரப்பு செய்திக்கான காரணத்தை மறைமுகமாக உங்களுக்கு சொல்லியிருக்கும். இன்னும் குழப்பத்தில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள ஒரு சின்ன கற்பனை உரையாடலை இங்கு தருகிறேன்.
தமிழர்கள் உயிருக்கு பயந்து வெறியேறுகிறார்கள் என்ற செய்தியையே எடுத்துக் கொள்வோம். இந்த செய்தி எடுப்பதற்கு முன்பு அந்த செய்தியாளர் என்னென்ன பேசியிருப்பார் என்பதை கற்பனையாக இங்கு தருகிறேன்.
ஒரு நிருபரும் ஒளிப்பதிவாளரும் அடங்கிய குழுவுக்கு பொறுப்பாளராக ஒரு தலைமை நிருபரோ அல்லது செய்தி ஆசிரியரோ இருப்பார். அவர்களின் வழிகாட்டுதலின்படிதான் இவர்கள் இயங்க முடியும். உணர்வுப்பூர்வமான ஒரு செய்தி என்றால் இவர்கள் பாடு படு திண்டாட்டம்தான்.
“என்னப்பா, அங்க நிலவரம் எப்படி இருக்கு?” – இது தலைமை நிருபர்.
“அமைதியா இருக்கு சார்! தமிழக லாரிகளெல்லாம் போலீஸ் பாதுகாப்போடு தமிழ்நாட்டுக்குள்ள வந்துக்கிட்டு இருக்கு.” – இது நிருபர்.
“அதுல எதுவும் கலவரத்துல சேதமான லாரி வருதா?”
“அப்படி எந்த லாரியும் வரல சார்.”
“வந்தா அத மிஸ் பண்ணிராதீங்க. பஸ் ஓடுதா..?”
“பஸ்களை இன்னும் அனுமதிக்கல. இரண்டு மாநில எல்லைகளோடு நிறுத்திடறாங்க. மக்கள் ஒரு கி.மீ. தூரம் நடந்து வந்து தமிழக பஸ்ஸில் ஏறுகிறார்கள்.”
“அவங்ககிட்ட பேசினீர்களா..?”
“பேசினோம்!”
“என்ன சொன்னாங்க..?”
“சொந்த ஊருக்குப் போய் ரொம்ப நாளாச்சு. கலவரம் ஓயிற வரைக்கும் அங்க போய் இருக்கப்போவதாக சொன்னாங்க.”
சிறிது நேர மவுனத்திற்குப் பின்..
“உயிருக்கு பயந்து தமிழர்கள் குடும்பம் குடும்பமாக மூட்டை முடிச்சோடு வெளியேற்றம். இதுதான் ‘லீடு’! இதுக்கு ஏத்த ஃபுட்டேஜ் எடுத்து அனுப்புங்க.!”
“சரிங்க சார்.!”
===
நிருபர் கூட்டத்தை தேடி போகிறார். பெண்களை தேடுகிறார். சோகமாக யாராவது வருகிறார்களா என்று பார்க்கிறார். அப்படி யாரும் வரவில்லை. பின் ஒரு பெண்ணை நிறுத்தி கேள்வி கேட்கிறார்.
“கன்னடர்களால் உங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டதா..?”
“இல்லை. மற்ற இடங்களில் கலவரமாக இருப்பதால். முன் ஜாக்கிரதையாக எங்கள் சொந்த ஊருக்குப் போகிறோம். நான் சொன்னது டிவியில வருமா..?”
“இப்படி சொன்ன வராது. நான் சொல்ற மாதிரி முகத்தை சோகமா வச்சுக்கிட்டு சொன்ன வரும்.”
“எனக்கு டிவிலே என் முகம் வந்தா போதும்.”
செய்தியாளர் சொன்னதுபோலவே அந்தப் பெண் சோகமாக சொல்கிறார். லீடுக்கான ஃபுட்டேஜ் கிடைத்துவிட்டது.
இதில் தமிழர்கள் வெளீயேறுகிறார்கள் என்பது உண்மை. அதில் உயிருக்குப் பயந்து என்பதுதான் ஊதி பெரியதாகும் சங்கதி. இதுதான் பரபரப்பு.
சரி ஊடகங்கள் ஏன் இப்படி மாறின? இன்றைக்கு ஊடகங்களுக்கு போட்டி சமூக ஊடகங்கள்தான். அதில் பரபரப்பாகவும் அதிரடியாகவும் உண்மையாக பொய்யாக என்று எதையாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக ஊடகங்களும் பரபரப்பு தர வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன. அதுபோக சக ஊடகங்களின் போட்டியை சமாளிக்கவும் பரபரப்பாக ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது. அதனால் ஊடக தர்மம் காற்றில் பறக்கவிடப்படுகிறது.
கன்னடர்கள் பலர் தங்கள் வாகனங்களில் தமிழர்களை ஏற்றிக்கொண்டு தமிழக எல்லையில் வந்து விட்டிருக்கிறார்கள். இதை எந்த ஊடகமும் செய்தியாக வெளியிடவில்லை. அதேபோல் சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு கர்நாடகா எண் கொண்ட காரில் சென்று கொண்டிருந்த ஒரு கன்னட குடும்பத்தை மறித்து நிறுத்தி, அவர்களின் காரை பத்திரமாக ஓரிடத்தில் நிறுத்திவிட்டு தமிழக பதிவு எண் கொண்ட காரில் அனுப்பி வைத்தார்கள். அதுதான் பாதுகாப்பு என்றும் திரும்பி வரும்போது உங்கள் காரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள். இந்த நல்ல செய்தி எதுவும் எந்த ஊடகத்திலும் வரவில்லை. அதற்கு பதிலாக வன்முறை செய்திகளை முந்தி தருகிறார்கள்.
அதற்காக ஊடகங்களை ஒரேயடியாக குறையும் சொல்லிவிட முடியாது. சென்னை வெள்ளத்தின் போது அரசைவிட பொதுமக்கள் உடனடியாக வந்து உதவியதற்கு ஊடகங்களின் ஒளிபரப்பே காரணம். அப்துல் கலாம் இறந்தபோது கூடிய கூட்டத்துக்கு ஊடகங்களின் பங்கு அதிகம். ஊடகங்கள் நல்லதும் செய்கின்றன. அதன் எண்ணிக்கை குறைவாக இருப்பதுவே வருத்தமாக இருக்கிறது.