
“பொய்மையும் வாய்மை இடத்த, புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்ற குறள் மூலம் “குற்றமில்லாத நன்மை விளைவிக்கும் எனில், பொய்யான சொல்லும் உண்மை என்றே கருதப்படும்” என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார். இதைச் சொன்னபின், எந்தக் குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லப்படலாம் என்பதற்குரிய நியாயங்களையும் அறிய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
ஹிப்போ அகஸ்டின் பொய்களை எட்டு விதமாக வகைப்படுத்துகிறார்.
1. மதபோதனையின் போது சொல்லப்படும் பொய்கள்.
2. யாருக்கும் உதவிடாமல் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பொய்கள்
3. மற்றவர்களுக்குத் தீங்கு விளைவித்து, ஒரு சிலருக்கு உதவிடும் பொய்கள்.
4. பொய் சொல்வதில் கிடைக்கும் மனமகிழ்ச்சிக்காகக் கூற்படும் பொய்கள்.
6. யாருக்கும் தீங்கிழைக்காத, ஆனால் யாருக்கோ உதவிடும் பொய்கள்.
7. யாருக்கும் தீங்கிழைக்காது ஆனால் யாரையோ காப்பாற்றுவதற்காகச் சொல்லப்படும் பொய்கள்.
8. யாருக்கும் தீங்கிழைக்காத ஆனால் யாருடைய தூய்மையையோ பாதுகாக்கச் சொல்லப்படும் பொய்கள்
பொய் என்ற வார்த்தை ஒரு சமூக ஆர்வலரைப் பொறுத்தவரை, “மிகைப் படுத்தப் பட்ட நோக்கத்தைக்” குறிக்கிறது. ஒரு அரசியல்வாதியைப் பொறுத்தவரை, அவர் “தனது கனவுகளை, விற்பனை செய்வதைக்” குறிக்கிறது. சாதாரண மனிதனுக்கு, அது சந்தர்ப்பத்தின் தேவையைப் பொறுத்ததாக இருக்கிறது.
யாரும் பொய் சொல்லவே கூடாது எனத் தடை விதிக்கப்பட்டால் நமது அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துப் போகும். ஊடகங்களில் நாம் காணும் ஆபூர்வ விளம்பரங் களிலிருந்து, நமது சினிமா நட்சத்திரங்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்குச் சூட்டப்படும் புகழ் மாலைகள், பாராட்டுக்கள் எல்லாம் மாயமாகிவிடும்.
இலக்கியங்கள், மதங்கள், அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல்வாதிகள் தீட்டும் சொற் சித்திரங்கள் எல்லாம் வறட்சியைச் சந்திக்கும். இதனால் வாழ்க்கையே, சுவையும் சுறுசுறுப்பும் இல்லாமல் போய்விடும். ஆகவே, பொய் சொல்வது அல்ல பிரச்சினை. “எப்பொழுது, எந்த இடத்தில் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று வரையறை செய்து கொள்வதுதான் பிரச்சினை” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு தனிமனிதனின் மூளை அமைப்பில் உள்ள ஒரு கூறு சரியாகச் செயல்படாமல் போனால், தன்னை அறியாமலே அவர் பொய்யுரைகள் கூறுவதற்கு அது வழி வகுக்கும். இப்படிப்பட்ட நிலையை மருத்துவ அறிவியல் மைதோமேனியா Mythomania எனக் கூறுகிறது. அத்துடன் “பொய் சொல்லும் ஒருவர் எப்பொழுதுமே பொய் சொல்லிக் கொண்டிருப்பாரா? என்ற கேள்வி எழுகிறது. அது அவசியமில்லை.
பொய் சொல்வது ஒரு அறிவாற்றலின்படியான செயல். அதாவது ஒரு மனிதர் உணர்ந்தே அந்தப் பழக்கத்தை வைத்திருக்கிறார். அதன்படி அவர் எப்போது, எங்கே பொய் சொல்வது என்பதைத் தன் விருப்பத்திற்கேற்றபடி வைத்துக் கொள்கிறார். அது பெரும்பாலும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இருக்கும்.