Header Banner Advertisement

எப்போதும் காதுக்குள் இரைச்சல்..!


002

print
மெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் காதுக்குள் இரைச்சல் என்பது ஒரு முக்கியமான நோயாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் காதில் இரைச்சல் இருந்து கொண்டே இருப்பதால் அமைதியான உலகை அனுபவிக்க முடியாமல் இவர்கள் அவஸ்தைப்படுகிறார்கள். சில சமயம் இந்த இரைச்சல் சத்தத்தை சம்மந்தப்பட்டவர் மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களால் கூட கேட்க முடியும்.

இது முழுவதும் உடலியல் கோளாறுகளால் ஏற்படுவதாகும். காதை சுற்றியிருக்கும் ரத்தக்குழாய்கள் சுருங்கிப்போவதாலோ, அந்த ரத்தக்குழாய்களில் சிறுசிறு கட்டிகள் உருவாவதாலோ காதின் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. கூடவே இதய துடிப்புக்கு ஏற்ப ரத்தக்குழாய்கள் சுருங்கி விரியும்போது இயக்கம் சிரமத்துக்குள்ளாவதால் ஒருவித சத்தம் உண்டாகி அது இரைச்சலாகவும் வெளிப்படுகிறது. நடுக்காது மற்றும் வாயின் மேற்பகுதியில் உள்ள தசைகள் கூட சிலருக்கு துடித்து அது இரைச்சலாக கேட்கிறது.

இந்த காது இரைச்சல் நோயை உயிருக்கே ஆபத்தான நோயாகத்தான் நோயாளிகள் நினைக்கிறார்கள். ஒரு திருவிழாக் கூட்டத்தின் நடுவில் உரத்தக்குரலில் கண்டபடி கத்திக்கொண்டு இருக்கும் கூட்டத்தில் நம்மால் எவ்வளவு நேரம் இருக்க முடியும். சில நிமிடங்கள் மட்டுமே இருக்க முடியும். அதைக் கூட தாங்க முடியாமல் காதைப் பொத்திக்கொள்ள தோன்றும். ஆனால், இவர்களால் அப்படி எந்த தடுப்பு காரியமும் செய்ய முடியாது.

வாழ்க்கை முழுவதும் எப்போதும் காதில் பெரும் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருப்பதால் நரக வேதனையை அனுபவிப்பார்கள். இந்த இரைச்சலில் காது செவிடாகிவிடும் என்று பயப்படுவார்கள். உண்மையில் இதனால் காது செவிடாகாது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

எந்த காரணத்தால் காது இரைச்சல் வந்தது என்பதை கண்டறியப்பட வேண்டும். காரணத்தை சரி செய்தால் இரைச்சல் மறைந்து விடும். உதாரணத்திற்கு செவிப்பறையை அழுத்திக்கொண்டு இருக்கும் அழுக்கால் உண்டான இரைச்சல் என்றால் அந்த அழுக்கை எடுத்து விட்டாலே இரைச்சலும் நின்றுவிடும். ஜலதோஷத்தால் கூட தற்காலிக இரைச்சல் ஏற்படும்.

ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, தைராய்டு பிரச்சனைகள், அதிக அளவில் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை உபயோகிப்பது, செவிப்பறையில் ஓட்டை, காதில் சீழ்வருவது இவையெல்லாம் கூட காது இரைச்சலை கொண்டு வரலாம். இவற்றை குணப்படுத்திவிட்டால் இரைச்சல் நின்று விடும். என்றாலும், இப்படி காது இரைச்சலுக்கு காரணம் தெரிவது 20 சதவீத நோயாளிகளிடம் மட்டும்தான்.

மற்றவர்களிடம் காரணமே கண்டுபிடிக்க முடியாது. சில பொதுவான மருந்துகளை நோயாளிகளுக்கு பரிசோதனை முறையில் கொடுத்துப்பார்ப்பார்கள். இதில் எந்த மருந்து மூலம் பயன்படுகிறதோ அந்த மருந்தை தொடர்ந்து பயன்படுத்தி நோய்க்கு தீர்வு ஏற்படுத்துவார்கள்.

ஒரு புள்ளிவிவரம் பிறவியில் காதுகேளாதவராக இல்லாமல் பின்னாளில் கேட்கும் திறன் இழந்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு காது இரைச்சல் இருப்பதாக சொல்கிறது. காது இரைச்சல் உள்ளவர்களுக்கு அதைவிட சத்தமான கூச்சல் நிறைந்த இடமே சற்று அவஸ்தையை குறைக்கும். அமைதியான சூழ்நிலையில்தான் காது இரைச்சல் அதிகப்படியான அவஸ்தைகளைத் தரும்.