
தமிழ் சினிமாவில் ஒதுக்கி புறம்தள்ள முடியாத மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் எல்லீஸ் ஆர்.டங்கன். இவர் ஒரு அமெரிக்கர். ஆனால், அமெரிக்காவில் ஒரு படம் கூட எடுத்ததில்லை. இவர் தனது சினிமா தாகத்தை தீர்த்துக்கொள்ள தேர்ந்தெடுத்த இடம் இந்தியா, அதிலும் தமிழ்நாடு.
![]() |
எல்லீஸ் ஆர்.டங்கன் |
அமெரிக்காவில் இவர் படம் எடுக்காமல் இந்தியா வந்ததற்கு காரணம் இருக்கிறது. ஆரம்பக் கால தமிழ் சினிமாவில் பிராமணர்கள் ஆதிக்கம் இருந்ததுபோல், அமெரிக்காவின் பல துறைகளிலும் யூதர்களின் கையே ஓங்கியிருந்தது. சினிமாவிலும் அவர்களே முழு ஆதிக்கம் செலுத்தினர். அவர்களுடன் போட்டிபோடுவது சாதாரணமான விஷயமில்லை. இன்றைக்கும் கூட புகழ்பெற்று விளங்கும் பல ஹாலிவுட் இயக்குநர்கள் யூதர்களே. ஸ்டீபன் ஸ்பீல்பர்க், ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
![]() |
‘சதிலீலாவதி’யில் எம்.ஜி.ஆர். |
எல்லீஸ் ஆர்.டங்கனின் முதல் படம் 1936-ல் வெளிவந்த ‘சதிலீலாவதி’. ஆனந்த விகடனில் எஸ்.எஸ்.வாசன் தொடராக எழுதிய கதையே அது. அந்த படத்தில்தான் எம்.ஜி.ஆர்.ஒரு துணை கதாபத்திரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டார்.
இந்தியாவின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டு விலகாதவர்களாகவே அன்றைய பெண்கள் இருந்தார்கள். அதைதான் தமிழ் படங்களும் சித்தரித்து வந்தன. இதை மாற்றி மதுக் கோப்பைகளை கையில் ஏந்திய மங்கையர்கள் கவர்ச்சி நடனம் ஆடும் கிளப் டான்ஸ் பாடல்களை தனது முதல் படத்திலேயே அறிமுகம் செய்தார். படம் மாபெரும் வெற்றியைக் கொண்டாடியது.
![]() |
‘அம்பிகாபதி’ படப்பிடிப்பில் |
டங்கனின் இரண்டாவது படம் 1937-ல் வெளிவந்தது. அன்றைய சூப்பர் ஸ்டாரான தியாகராஜாபாகவதர் நடித்த ‘அம்பிகாவதி’ படம்தான் அது. எந்த சூழ்நிலையிலும் தான் நடிக்கும் படத்தில் எந்த நடிகையுடனும் நெருங்கி நடிப்பதில்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வந்தார். ஆனால், அப்படிப்பட்ட பாகவதரையே அந்த படத்தின் கதாநாயகியுடன் நெருக்கமாக நடிக்க வைத்தார் டங்கன். அதனால், திரையுலகின் முதல் ‘காதல் மன்னன்’ என்ற பட்டம் பாகவதரை வந்து சேர்ந்தது.
அதன்பின், 1940-ல் இவர் இயக்கிய ‘சகுந்தலை’ படத்திலும், 1945-ல் வெளியான ‘மீரா’ படத்திலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியை முக்கியமான வேடத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில்தான் முதன்முதலாக குளோஸ்-அப் காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. திரை முழுவதும் தெரிந்த சுப்புலட்சுமியின் முகத்தைப் பார்த்து பார்த்து பரவசமடைந்தார்கள் ரசிகர்கள்.
![]() |
‘மீரா’வில் எம்.எஸ்.சுப்புலட்சுமி |
1950-ல் இவர் இயக்கி வெளிவந்த ‘மந்திரகுமாரி’ படத்தில் முதன்முதலாக டிராலி ஷாட்டை அறிமுகபப்டுத்தினார். டிராக் அமைத்து அதன் மீது டிராலியில் கேமராவை வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன.
![]() |
‘மந்திரிகுமாரி’யில் எம்.ஜி.ஆர். |
காரின் மீது பிளாட்பாரம் போன்ற அமைப்பை உருவாக்கி, கேமராவை அதன் மீது வைத்து நடிகர்கள் குதிரைகளின் மீது வேகமாக பாய்ந்துவரும் காட்சியை அற்புதமாக படமாக்கி காண்பித்தார். அதன் பின்னர்தான் இந்த தொழில் நுட்பங்கள் எல்லாம் தமிழ் படங்களில் பயன்படுத்தப்பட்டன.
ஹாலிவுட் டெக்னிக்கை தமிழில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர், எல்லீஸ் ஆர்.டங்கன் தான். தமிழ் சினிமா புதிய உயரங்களை தொடுவதற்கு அஸ்திவாரம் அமைத்தவர், டங்கன் என்பதை மறுக்க முடியாது.