
இந்த சினிமா காட்சிகள் ஆப்ரிக்காவின் முக்கியப் பிரமுகர்களுக்கும் மற்ற மதத் தலைவர்களுக்கும் போட்டுக்காடப்பட்டன அவர்களில் பெரும்பாலானவர்கள் மத அடிப்படைவாதிகள். அவர்கள் தங்கள் மதப்படி மனித உருவத்தை இறைவனைத் தவிர மற்றவர்கள் படைப்பது தடை செய்யப்பட்ட ஒன்று என்று நம்பினார்கள். இருப்பினும் அவர்களால் தங்கள் ஆட்சியாளர்களின் உத்தரவை மீற முடியாமல் சினிமா காட்சிக்கு வந்திருந்தார்கள்.
வெப்பம் மிகுந்த அந்த முன்னிரவுகளில் திடீரென்று இரண்டு தூண்களுக்கு இடையே வெண்திரை கட்டப்படும். விளக்குகள் அணைக்கப்படும். அதிசயக்கருவி ஒன்றில் இருந்து ஒளிக்கற்றை வெண்திரையில் பாயும். உடனே ஆப்ரிக்க மதத் தலைவர்களும் மற்றவர்களும் தங்கள் கண்களை மூடிக்கொள்வார்கள். இதனால் என்ன காட்டப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது.
ஒரு கார், ஒரு ஆண், ஒரு பெண், ஒரு குதிரை என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மவுன பிம்பங்களைத்தான் அவர்கள் பார்த்தனர். இவற்றை இணைத்து கதையை தெரிந்து கொள்ள இயலவில்லை. திகைப்பும் குழப்பமுமே மிஞ்சியது. தொடர்ந்து சினிமா பார்க்கத் தொடங்கிய பின்னர் தான் அவர்களுக்கு கதை புரியத் தொடங்கியது. சினிமா பார்க்காமல் கண்களை மூடிக்கொண்ட இருண்ட கண்டத்திலிருந்தும் கூட பின்னாளில் தரமான சினிமாக்கள் வெளிவந்தன என்பது தனிக்கதை.