Header Banner Advertisement

குடமிளகாய் கொத்துக்கடலை ஸ்டூ செய்முறை


001

print

மிகக் கொஞ்சமாய் காய், சுவை குறைந்த கடுமையான காய் அல்லது கீரை வகைகள், பருப்பு வேக வைக்க நேரமின்மை, தேங்காய் அதிகம் சேர்க்க விரும்பாமை இப்படி பல காரணங்களுக்காக, இந்தக் கூட்டில் சேர்த்திருக்கும் மசாலாவை உபயோகிப்பது நல்லது. எல்லாக் குறைகளையும் மறைத்து, அடர்த்தியான கிரேவியுடன் மிகுந்த மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருள்கள்:
குடமிளகாய் – 1/4 கிலோ
வெள்ளைக் கொத்துக்கடலை – 1/2 கப்
தக்காளி – 2, 3 (விரும்பினால்) **
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை

வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3, 4
துவரம் பருப்பு – 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
மல்லி விதை – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை.

1

செய்முறை:

வெள்ளைக் கொத்துக்கடலையை தண்ணீரில் குறைந்தது 10 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

குடமிளகாயை, காம்பு, குடலை நீக்கி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

எண்ணெயில் காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி விதை என்ற வரிசையில் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, தேங்காயுடன் மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளித்து, நறுக்கிய தக்காளி, குடமிளகாயைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

வேகவைத்த கொத்துக் கடலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மூடி, மிளகாயை முக்கால் பதம் வேகவைத்துக் கொள்ளவும். (சட்டென வெந்துவிடும். குடமிளகாய் அதிகம் வெந்தால் சுவையாக இருக்காது.

அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து மேலும் ஒரு கப் அல்லது தேவைப்பட்டால் அதற்கும் மேல் தண்ணீர் சேர்க்கவும். இந்த விழுது, அதிகத் தண்ணீர் இழுக்கும்.

3, 4 நிமிடங்கள் சிம்மில் வைத்து, கலவை கொதித்து கெட்டியாகி, அடர்த்தியான கிரேவியாக வந்ததும், இறக்கி, மல்லித் தழை கலந்து உபயோகிக்கலாம்.

இந்தத் தயாரிப்பை குடமிளகாய் கொத்துக்கடலைக்கு மட்டும் இங்கே சொல்லியிருந்தாலும் பொதுவாக எந்த ஒரு தனி காயுடனும், விரும்பினால் அதனொத்த பயறுடனும் சேர்த்தோ சேர்க்கமலோ செய்யலாம். கீரை வகைகளுடனும் மிகப் பொருந்தும்.

c-2

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இந்த முறையில் செய்யும் மற்ற காய்கறிகள், பொதுவான சாப்பாட்டுக்கு உபயோகிக்கலாம் என்றாலும் பிரத்யேகமாக இந்த குடமிளகாய், கொத்துக்கடலை ஸ்டூ, ஃப்ரைடு ரைஸ் போன்ற தக்காளி சாதம், புளியோதரை, எலுமிச்சை, தேங்காய் சாத வகைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதே மாதிரி செய்யப்படும் அரிசி சேவை வகைகளுக்கும்.

எலுமிச்சை, புளியோதரை போன்ற புளிப்பு சேர்ந்த சாத வகைக்களுக்குச் செய்யும்போது, இந்தக் கூட்டில் தக்காளி சேர்க்காமல் செய்யலாம்.