
அவர்கள் சொல்லாத கருத்துக்கள் இல்லை. ஈடுபடாத துறைகள் கிடையாது. ஆன்மிகம், மருத்துவம், ஜோதிடம் என எல்லாம் உணர்ந்த ஞானிகளாகத்தான் சித்தர்கள் இருந்தார்கள்.
கடவுளைக் காண முற்படுபவர்கள் பக்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
இறைவனை கண்டுணர்ந்த சித்தர்கள் வாழும் பூமிக்கு ஒருமுறையேனும் போய் வந்தால்தான் ஜென்மம் முக்தி அடையும். அந்த இடம் சதுரகிரி.
சதுரகிரி தான் சித்தர்களின் தலைமைப்பீடம். சித்தர்கள் எதைப்பற்றியாவது விவாதம் நடத்த வேண்டும் என்றால் அவர்கள் ஒன்று கூடுவது இந்த சதுரகிரியில் தான்.
சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தூக்கிப் போகும்போது அதன் ஒரு பகுதி இங்கே விழுந்தது என்றும், அதனால்தான் இந்த மலை மூலிகைகள் நிறைந்த வனமாக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
சதுரகிரி பயணம் சற்று கடினமான பயணம் தான். அனுபவம் வாய்ந்தவர்கள் துணையோடு பயணம் செய்வதே நல்லது.
எங்களுக்கு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் டவாலியாக பணிபுரியும் சக்திவேல் சாமியார் துணையாக வந்தார். இவரை சாமி என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். 60 முறை சதுரகிரி சென்ற பழுத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டபடி எங்கள் பயணம் தொடர்ந்தது. என்னுடன் நண்பர் முரளி கிருஷ்ணனும் வந்திருந்தார். சொல்லப் போனால் அவர்தான் எனது சதுரகிரிப் பயணத்தின் மூலகர்த்தா!
மதுரையில் இருந்து ஒரு மதிய வேளையில் பஸ்ஸில் எங்கள் பயணம் தொடங்கியது. திருமங்கலம், கல்லுப்பட்டி, கிருஷ்ணன் கோவில், பேரையூர் வழியாக சதுரகிரியின் மலையடிவாரமான தாணிப்பாறைக்கு வந்து சேர்ந்தேன்.
சதுரகிரி பயணத்தின் துவக்கம் தாணிப்பாறை. இது மலை அடிவாரம். இங்கிருந்து சதுரகிரிக்கு 8 கி.மீ. நீண்ட மலைப்பாதையில் நடந்தே போக வேண்டும். நான்கைந்து மலைகளைக் கடந்து சதுரகிரி அடைய வேண்டும். அதனால் மலைப்பாதை ஏற்ற இறக்கம் கொண்டதாக இருக்கும்.
மலைப்பாதையின் துவக்கத்தில் ஆசீர்வாத விநாயகர் கோவில் உள்ளது. இவரிடம் ஆசிப் பெற்றுதான் புனிதப் பயணத்தை தொடங்க வேண்டும்.
அதன் பின்னர் ராஜயோக தங்க காளியம்மன், பேச்சியம்மன், அத்திரி மகரிஷி, கருப்பண சாமி, கோரக்கர் குகை, இரட்டை சிவலிங்கம், நாவல் ஊத்து, சின்ன பசுகடை, பெரிய பசுகடை நடந்து இறுதியாக பிலாவடிக் கருப்பர் ஆலயத்தில் இந்த யாத்திரை முடிவடையும்.
மழைக்காலங்களில் இந்த ஆலயத்திற்கு முன்பாக காலாங்கிநாதர் உருவாக்கிய பிரம்மதீர்த்தம் ஓடிக் கொண்டிருக்கும். இதில் நீராடி எழுந்து பிலாவடிக்கருப்பரை வணங்கினால், பாவம் தொலைந்து புண்ணியம் வந்து சேரும் என்று புராணம் கூறுகிறது.
பிலாவடி கருப்பரை தரிசித்தப்பின் சுந்தர மூர்த்தியை வணங்க வேண்டும். சதுரகிரியில் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் சுந்தர மூர்த்திதான்.
இதை பிரதிஷ்டை செய்தவர் மகாசித்தர் அகத்தியர். அவரைத் தொடர்ந்து பல சித்தர்கள் பூஜித்து வழிப்பட்ட லிங்கம் என்பதால் இதன் சக்தி அபரிவிதமானது. இவரிடம் வைக்கும் எந்தவொரு பிரார்த்தனையும் வீண் போவதில்லை.
சுந்தர மூர்த்தியை தரிசித்தப்பின் சிறிது தூரம் நடந்தால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வருகிறது. இந்த ஆலயத்தில் தினமும் நான்கு வேளை பூஜை நடை பெறுகிறது. காலசந்தி (காலை 6 மணி), உச்சி காலம் (நண்பகல் 12 மணி), சாயரட்சை (மாலை 4 மணி), அர்த்த ஜாமம் (மாலை 6 மணி) பூஜைகள் நடக்கின்றன. அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களில் அபிஷேகங்களும், அலங்காரங்களும் விமரிசையாக இருக்கும். ஆடி அமாவாசை மிக விஷேசமானது.
![]() |
சுந்தர மகாலிங்கம் |
இப்போது சந்தன மகாலிங்க கோயிலுக்கு படிக்கட்டுகள் அமைந்த அருமையான பாதை அமைத்திருக்கிறார்கள். எந்த வித பயமுமில்லாமல் சந்தன மகாலிங்கத்தை தரிசித்து மகிழலாம். இங்குதான் சட்டநாத சித்தர் வாழ்ந்து தவம் புரிந்த குகை இருக்கிறது. அருகிலேயே ஸ்ரீசந்தன மகாதேவி அம்மன் சந்நிதி உள்ளது.
இங்கிருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தூரம் நடந்தால் வனக்காளி, பரவைக்காளி என்று அழைக்கப்படும் காளிதேவி சிலை இருக்கிறது.
![]() |
காளிதேவியை வணங்கும் டவாலி சக்திவேல் |
![]() |
மரத்தில் அகத்தியர் |
![]() |
தவசி பாறை போகும் பாதை |
![]() |
தவசிப் பாறை |
![]() |
தவசிக் குகையில் நான் |
தவசிப் பாறைக்கு கீழே ஒரு பாறை உள்ளது. இதை ‘குளிர் பாறை’ என்கிறார்கள். அபாயம் நிறைந்த இந்த பாறையில் அமர்ந்தால் சிலு சிலுவென ஏஸியில் இருப்பது போல் குளிர்ந்த காற்று நம்மை தாக்கும்.
தவசிப்பாறையை சென்ற பின் கீழே இறங்கும் மற்றொரு வழியில் வந்தால் பெரிய மகாலிங்கம், வெள்ளை விநாயகர், மாவூத்து போன்றவற்றை வணங்கி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வந்து சேரலாம்.
இதில் பெரிய மகாலிங்கம் என்பது மிகப் பெரிய பாறையில் இயற்கையாக உருவானது. பார்ப்பதற்கு சிவலிங்கம் போலவே காட்சி தருவதால், பெரிய மகாலிங்கம் என்கிறார்கள். இந்த பாறை கீழே விழுந்துவிடாமல் மரத்தின் வேர்கள் சடை போல் பின்பக்கம் பிடித்து பாதுகாக்கின்றன.
![]() |
பெரிய மகாலிங்கம் |
சதுரகிரியின் அனைத்து இடங்களையும் பார்த்து முடிக்க குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் தேவை. இங்கு ஹோட்டல்களோ, தங்கும் விடுதிகளோ கிடையாது. மடங்கள் மட்டும் இருக்கின்றன.
வத்திராயிருப்பில் இருக்கும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் செயல் அலுவலரிடம் இருந்து கடிதம் பெற்று வந்தால் இந்த மடங்களில் இலவசமாக தங்கலாம். அதுவும் விசேஷம் இல்லாத சாதாரண நாட்களில் தான் அனுமதி கிடைக்கும்.
![]() |
நாகக் கன்னி |
அதன்பின் மலையேறி வருபவர்கள் உணவின்றி பசியால் தவித்திருக்கிறார்கள். இந்த அனுபவம் மதுரையைச் சேர்ந்த ஆர்.ஆர் என்கிற ராஜரத்தினத்துக்கும் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் எண்ணத்தில் உதித்ததுதான் 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் அமைப்பு.
‘அருள்மிகு சுந்தரமகாலிங்கம் யாத்திரிகர் சேவை அறக்கட்டளை’ என்ற பெயரில் 2007-ம் ஆண்டு துவங்கப்பட்டது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை தொடர்ந்து உணவு வழங்கப் படுகிறது. 12 மணிக்கு மேல் பக்தர்கள் வந்தால், உடனடியாக உணவு தயார் செய்து பரிமாறுகிறார்கள்.
இதனால் சதுரகிரியில் சாப்பாட்டுக்கு பஞ்சமில்லை. சதுரகிரி மலைக்கு நடந்து சென்று தரிசிக்க முடியாதவர்களுக்காக ‘டோலி’ வசதியும் இருக்கிறது. இதற்காக தாணிப்பாறையில் சில ஆட்கள் இருக்கிறார்கள். சதுரகிரிக்கு போக வர இரண்டுக்கும் சேர்த்து ரூபாய் 4,000 கூலியாக பெறுகிறார்கள். இதன் மூலம் வயதானவர் களும், நடக்க முடியாதவர்களும் மகாலிங்கத்தை தரிசிக்க முடியும்.
சித்தர்கள் உலவும் இந்த மலையில் ஏறி இறங்குவதே ஆரோக்கியம் நிறைந்த சுக அனுபவத்தை தரும்.
சதுரகிரியில் நமக்கு தெரியாத மர்மமான பல பகுதிகள் இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது.