Header Banner Advertisement

சிலுவை மலை திருப்பயணம்


3

print
நாகர்கோவில் பஸ் நிலையத்தில் எனது பஸ்சுக்காக காத்திருந்தேன். அப்போது ‘குருசுமலை விழா பேருந்து’ என்ற போர்டை தாங்கிக்கொண்டு பல பஸ்கள் போய்க்கொண்டு இருந்தன.

குருசுமலையை அதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. அந்த பெயர் ஏதோ மந்திரம் போட்டதுபோல் என்னை இழுத்தது. இத்தனை மனிதர்கள் சாரை சாரையாக போகிறார்கள் என்றால் அது விசேஷம் மிக்கதாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

நான் போக வேண்டிய ஊரைத் துறந்து குருசுமலைக்கு பஸ் ஏறினேன். குமரி மாவட்டத்தின் மிக உயரமான மலை அதுதான். கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 3,600 அடி உயரம் கொண்டது. தமிழக கேரள எல்லை பகுதியில் எல்லைக் கோடு போல் உயர்ந்து நிற்கிறது இந்த மலை. இதற்கு காளி மலை, குரிசு மலை, கொண்டகெட்டி, கூனிச்சி, வரம்பொதி என்று ஏராளமான பெயர்கள் உள்ளன.

நான் சென்றிருந்த சமயம் குருசுமலையில் திருவிழா கூட்டம் கால்வைக்க இடமில்லை. வருடந்தோறும் புனித வெள்ளிக்கு முந்தைய இருவாரங்களுக்கு முன் வரும் புதன் கிழமையில் இந்த கடினமான கொண்டாட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. அதன் பின் புனித வெள்ளி அன்று மீண்டும் கொண்டாட்டம் தொடங்கி முடிகிறது. இந்த 6 நாட்களில் லட்சக்கணக்கான மனிதர்கள் குருசுவை தரிசனம் செய்து மகிழ்கிறார்கள்.

‘கெத்செமனே’  என்ற சிறிய குன்று

‘குருசு’ என்ற மலையாள வார்த்தைக்கு ‘சிலுவை’ என்று அர்த்தம். மலை உச்சியில் சிலுவை இருப்பதால் இந்த மலைக்கு ‘சிலுவை மலை’ என்று பெயர். தமிழக மலைகளின் உச்சியில் இந்துக் கோயில்கள் இருக்கும். சிலவற்றில் முஸ்லீம் தர்ஹாக்கள் இடம் பெற்றிருக்கும். மலையின் மீது கிஸ்துவ ஆலயங்கள் இருப்பது அரிது. அப்படியொரு அரிதான மலைக்குத்தான் பயணித்துக் கொண்டிருந்தேன்.

என்னுடைய பஸ் தமிழகத்தைக் கடந்து கேரளாவுக்குள் நுழைகிறது. குருசுமலையில் ஏறவேண்டும் என்றால் கேரளாவில் உள்ள வெள்ளறடைக்குப் போயாக வேண்டும். அங்கிருந்துதான் மலைப்பயணம் தொடங்குகிறது. பஸ் வரும் பாதையெங்கும் விழாவின் அடையாளங்கள் சிறப்பாக இருந்தன. ஒலிபெருக்கியில் கிறிஸ்துவக் கீதங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. பக்தர்களை வரவேற்கும் அலங்கார வளைவுகள் எல்லா இடங்களிலும் சாலையில் அமைக்கப்பட்டு இருந்தன. வெள்ளறடையை அடையும் முன்பே திருவிழா உற்சாகம் அனைவரையும் தொற்றிக் கொண்டது.

வெள்ளறடையில் திரும்பிய பக்கமெல்லாம் மனித முகங்கள்தான். அந்த மனித சமுத்திரத்தில் நீந்திதான் மலையேற வேண்டும். இதை ‘குருசு மலை திருப்பயணம்’என்கிறார்கள். பயணம் என்பது சந்தோஷ­த்துக்காக செல்வது. திருப்பயணம் என்பது ஆண்டவனுக்காக செல்வது. திருப்பயணம் எப்போதுமே கடினமானது தான். சபரிமலை பயணமோ, வெள்ளியங்கிரி மலை பயணமோ சாதாரணமானது அல்ல.

குருசு மலையும் அப்படித்தான். இந்த மலையில் ஏறுவதே ஒரு சாகஸம்தான். கல்வாரி மலையில் ஏசுக்கிறிஸ்து சிலுவையைச் சுமக்கும்போது பட்ட வேதனைகளையும், வலிகளையும் நமக்கு உணர்த்தும் பயணம் இது. புனித வெள்ளிக்கு முன்பு இப்படி சிலுவை பாதையில் செல்வது பாரம்பரிய வழக்கம். அப்படியொரு பயணத்தில் தான் நானும் கலந்து கொண்டேன். அப்போது அது கடினமாகத் தானே இருக்கும்.

பிரார்த்தனை நிலையில் ஏசுநாதர் 

கற்களும் புழுதியும் நிறைந்த குறுகலான கடினமான பாதையில் மலையேறுவது திணற வைக்கும் அனுபவம். மலையேறும் முன் சமதளத்தில் 50 அடி உயரத்தில் சிறிய குன்று இருக்கிறது. இதுதான் பயணத்தின் முதல் இடம். பிரார்த்தனை கூடம். இதை ‘கெத்செமனே’என்கிறார்கள். இங்கு ஏசுவே பிரார்த்தனை செய்வது போல் ஒரு சிலை உள்ளது.

‘கவனியுங்கள்….! பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் விழமாட்டீர்கள்…! ‘ என்ற வசனத்தை அது நினைவுப் படுத்துகிறது. மலை மீது ஏறும் இந்த பயணம் நல்லபடியாக நிறைவு பெறவேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கைதான் இங்கு வரும் எல்லோருக்கும் உதிக்கின்றன. இந்த பிரார்த்தனைக் கூடம் அருகில் பாதிரியார் ஜான் பாப்பிஸ்ட் சிலை உள்ளது. பெல்ஜியம் நாட்டில் பிறந்த இவர். நற்செய்தி அறிவிப்பதற்காக திருவிதாங்கூர் வந்தார். 1935 முதல் 1973 வரை கேரளாவில் இருந்தார்.

பாதிரியார் ஜான் பாப்பிஸ்ட் சிலை

உண்டன்கோடு தேவாலயத்தில் குருவாக இருந்தபோது கொண்டகெட்டி மலையின் உச்சியில் வாழ்ந்த மலைவாசிகளை காலரா, மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் எமனுக்கு உயிர்களைப் பலியாக அனுப்பிக் கொண்டிருந்தன. அவர்கள் நோய் வாய்ப்பட்டவர்களை இந்த தேவாலயத்துக்கு தூக்கி வந்தார்கள். அவர்களை சிலுவையின் அற்புதத்தால் ஜான் பாப்பிஸ்ட் குணப்படுத்தினார்.

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

கையில் எந்த பாரமும் இல்லாமல் வெற்று ஆட்கள் ஏறுவதற்கே திணறிப் போகும் இந்த மலைப் பாதையில் எப்படி நோயாளியையும் தூக்கிக்கொண்டு இறங்கினார்களோ, தெரியவில்லை..! செங்குத்தான இந்த மலையில் இருந்து நோயாளிகளைத் தூக்கி வருவது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது என்பதை மலைவாசிகள் பாதிரியாரிடம் தெரிவித்தனர். “நீங்கள் இங்கு  வரவேண்டாம்  உங்கள் இடத்தை தேடி தேவனே வருவார்” என்று கூறிய பாப்பிஸ்ட் 1957 மார்ச் 27-ல் மலை உச்சியில் மரத்தாலான ஒரு சிலுவையை  நிறுவி திருப்பலி நடத்தினார். அந்த மலைக்கு ‘தெக்கன் குருசுமலை’ என்று பெயரிட்டார். அன்றிலிருந்து குருசுமலை திருப்பயணம் ஆரம்பமானது. அந்தப் புனிதரின் ஞாபகார்த்தமாக இங்கு சிலை வைத்திருக்கிறார்கள்.

கன்னிமேரி ஏசு கிறிஸ்துவை மடியில் ஏந்தியிருக்கும் சிலை

மலைப் பாதையின் தொடக்கத்தில் சங்கமாவேதி என்ற தியானக்கூடம் உள்ளது. இங்கு தியானம் செய்யலாம். இதன் அருகே கன்னிமேரி ஏசு கிறிஸ் துவை மடியில் ஏந்தியிருக்கும் சிலை உள்ளது. குழந்தையை தாய் பாதுகாப்பது போல் மலையேறும் நம்மை கன்னிமேரி பாதுகாப்பாள் என்பது ஐதீகம். அங்கிருந்து  மலையேற்றம் தொடங்குகிறது. முதலில் ஒரு அரை கிலோமீட்டர் தூரத்திற்கு நல்ல ரோடு இருக்கிறது.  அதன்பின் தொடங்கும் கடினமான பாதை மலை உச்சி வரை இடைவெளி இல்லாமல் தொடர்கிறது.  குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்றாக மொத்தம் 14 சிலுவைகள் இந்த பாதையில் உள்ளன.

14 – வது சிலுவை

ஐந்தாவது சிலுவை உள்ள இடம் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் குளுமையான காற்றை சுவாசிக்கும் விதமாக உள்ளது. களைத்து வரும் பக்தர்களுக்கு அற்புதமான இடம்.

ஒன்று முதல் ஏழாவது சிலுவை வரை கேரள பகுதியில் உள்ளது. அதற்கு பின் தமிழ்நாட்டுப் பகுதி ஆரம்பமாகிறது. 7 – 14 சிலுவைகள் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஏழாவது சிலுவை வரை கேரள போலீஸ் பாதுகாப்பு பணியில் இருக்கும். எல்லோரும் மலையாளத்தில பேசிக் கொண்டிருப்பார்கள். 7வது சிலுவையில் இருந்து தமிழக போலீஸ் தமிழ் உரையாடல் என்று சூழலே மாறுவது ஒரு ரம்மியமான அனுபவம்.

பாறையில் ‘லாஸ்ட் ஸப்பர்’  ஓவியம்

பாறையில் வரையப்பட்டிருக்கும் ‘லாஸ்ட் ஸப்பர்’ என்ற ஏசுவின் கடைசி உணவு விருந்து சித்திரமாக தீட்டப்பட்டிருக்கிறது. அதையும் கடந்து உயரத்துக்குப் போனால் மலைமுகட்டில்தான் சிலுவை உள்ளது. ஜான் பாப்பிஸ்ட் செய்துதந்த மர சிலுவை இப்போது இல்லை. மோசமான தட்பவெப்பத்தினால் அது சிதைவுற்றது. அதன்பின் தற்போது உள்ள கான்கிரீட்டால் ஆன சிலுவையை வைத்துள்ளார்கள். இதன் உயரம் 25 அடி.

இந்த சிலுவை முன் சிறிய மண்டபம் உள்ளது. சிலுவை இருப்பது தமிழ்நாட்டில்தான் என்றாலும், இது நெய்யாற்றின்கரை கிறிஸ்துவ சபைக்கு கட்டுப்பட்டது. அதனால் தமிழ்நாட்டில் இருந்தாலும் ஆராதனை வழிபாடுகள் எல்லாம் மலையாள மொழியிலே நடக்கிறது.

மலை முகட்டில் உள்ள சிலுவை

இங்கிருந்த 500 மீட்டர் தொலைவில் காளிக்கோயில் உள்ளது. இந்த இடத்தை ‘காளிமலை’என்கிறார்கள். இங்கு துர்க்காதேவி, தர்ம சாஸ்தா, நாகயட்சி, சப்த கன்னியர் என்ற தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன.  மிக அழகான இடம். மலையின் ஒரு பக்கம் கேரளாவின் அழகை மேலிருந்து பார்க்கலாம்.  மறுபக்கம் தமிழகத்தின் இயற்கை அழகை பார்க்கலாம். மிக வசீகரமான இடம் இது.

சப்த கன்னியர்

இங்கிருக்கும் காளி தீர்த்தம் கோடையிலும் வற்றாதது. இது பல நோய்களை தீர்க்கும் மூலிகைத் தீர்த்தம் என்று கூறுகிறார்கள். சித்திராப்  பெளர்ணமிதான் இங்கு விசேஷம். அப்போது நிறைய பெண்கள் பொங்கலிட்டு காளிதேவியை வழிபடுகிறார்கள்.

மலை உச்சியில் இருக்கும் காளிதேவி கோயில்

இந்தக் கோவிலில் இருந்து கீழே போவதற்கு மோசமான மண் ரோடு ஒன்று உள்ளது. ஜீப்பைத் தவிர எந்த வாகனமும் இந்த வழுக்கும் ரோட்டில் போகமுடியாது. குருசு மலை ஏறமுடியாதவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகாணியில் இருந்து ஜீப் மூலம் மலை உச்சிவரை செல்லலாம். ஆனாலும் நடந்து போவதில் கிடைக்கும் மன திருப்தியும் உடல் ஆரோக்கியமும் இப்படி வாகனத்தில் போகும்போது கிடைக்காது.

குருசு மலை சாகஸம் செய்பவர்களுக்கும் அற்புதமான இடம். இந்த மலையேற்றமே நல்ல ஒரு டிரக்கிங் அனுபவத்தைத் தரும்.