Header Banner Advertisement

செம்மரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?


004

print
செம்மரங்கள் பொதுவாக வறண்ட காடுகளில் விளையும். இதற்கு தோதான இடமாக கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஆந்திர மாநிலம் திருப்பதி வனச்சரகம் இருக்கிறது. இந்த மரத்திற்கு குறைவான தண்ணீர் இருந்தால் போதும். மரத்தை வெட்டினாலும் மீண்டும் துளிர்த்துவிடும். மரம் தன்னைத்தானே வாழவைத்துக் கொள்வதற்கு இத்தனை வசதிகள் இருந்தும் இது அழிந்து வரும் அரிய தாவர இனங்களின் பட்டியலில் இருக்கிறது. அதற்கு காரணம் வழக்கம்போல் மனிதன்தான். அதனால்தான் இந்த மரத்தின் மீது அரசு அதீத கவனத்தை செலுத்துகிறது.
செம்மரத்தின் பயன்பாடு ஏராளம். கப்பல் கட்டுதல், தேர் சிற்பங்கள் செய்தல், தபேலா போன்ற இசைக்கருவிகள் தயாரித்தல், சாயம் தயாரித்தல், மருந்தாகப் பயன்படுத்துதல், வழக்கமான மரச்சாமான்கள் தயாரித்தல் என செம்மரங்களினால் பலன் அதிகம். இதுபோக செம்மரம் அணுக்கதிர் வீச்சை வேறு தடுக்குமாம். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் செம்மரத்திலான பொருட்களை வைத்திருப்பது கவுரவத்தின் அடையாளம்.

இதனால் உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இதன் தேவை அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒரு டன் ரூ.20 லட்சம் முதல் 40 லட்சம் வரை விலைபோகிறது. இதுவே வெளிநாடுகள் என்றால் ரூ.60 லட்சத்தில் தொடங்கி 1.20 கோடி வரை விலை கிடைக்கும். செம்மரங்களை கடத்த இந்த பணத்தாசை போதாதா? ஒருகாலத்தில் வயிற்றுப்பிழைப்புக்காக மரத்தை வெட்டியவர்கள் இன்று ஆடம்பர வாழ்க்கைக்காக வெட்டுகிறார்கள். பொறியியல் படித்த பட்டதாரி இளைஞர்கள் கூட விரைவில் பெரும் பணம் சம்பாதிக்க காரில் செம்மரக்கட்டைகளை கடத்துகிறார்கள்.

இதுமட்டுமல்ல, தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குட்பட்ட மலைகளிலும் வாழும் மக்கள் காடு சார்ந்த தொழில்களில் அனுபவம் வாய்ந்தவர்கள். தற்போது அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், ஆந்திராவில் செம்மரம் வெட்டித் தந்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று இடைத்தரகர்களின் ஆசை வார்த்தை இவர்களை உயிரையும் விட துணியவைக்கிறது.

இப்படி செம்மரம் வெட்டித் தருபவர்களுக்கு ஒரு நாளைக்கு 7000 ரூபாய் வரை கூலி கொடுக்கப்படுகிறது. அதனால்தான் ஆபத்து எனத் தெரிந்தும், இந்த மக்கள் குறுகிய காலத்தில் நிறைய வருமானம் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் செம்மரம் வெட்டுவதற்கு செல்கிறார்கள். ஒருவர் ஒரு நாளில் இவ்வளவு சம்பாதித்தார் என்று தெரிந்ததும், பக்கத்தில் இருப்பவர்களும் இதே வேலைக்கு செல்ல துடிக்கிறார்கள். இதனால் செம்மரம் வெட்டுவதற்கு நிறைய தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த துடிப்பை காசாக்க பெரும் பண முதலைகள் பணத்தோடு இவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நன்றாக தெரிந்தே பெரும் பணம் கிடைக்கிறது என்பதற்காகவே இந்த மரம் வெட்டும் தொழிலில் இங்குள்ள தமிழர்கள் ஈடுபடுகிறார்கள். இப்படி தொடர்ந்து ஈடுபடுவதே ஆந்திர அரசுக்கு ஆத்திரத்தை உருவாக்குகிறது. செம்மரக் கடத்தல் ஆந்திர அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு என்பது ஒரு பக்கம், இதில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள் என்ற கோபம் மறுபக்கம் என்ற இந்த இரண்டும் சேர்ந்துதான் ஆந்திர அரசை வெறியாட்டம் போட வைத்திருக்கிறது.

வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்டதுதான் செம்மரங்கள்.
மனிதர்கள் வெட்டப்பட்டால் மீண்டும் துளிர்ப்பதில்லையே..!