Header Banner Advertisement

தன்னம்பிக்கையின் மறுபெயர் கிரிஸ்டோபர் ரீவ்


Untitled

print
சூப்பர் மேனை தெரியாதவர்கள் யாரும் இந்த உலகில் இருக்க முடியாது. சினிமா உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பிரமிப்பில் கட்டிப் போட்டு வைத்த சாகச நாயகன். ஹாலிவுட் சூப்பர் மேன் பாத்திரத்தில் நடித்த கிரிஸ்டோபர் ரீவ்ஸ், 80 மற்றும் 90 களின் கனவு நாயகன். ‘உலகின் பலசாலி’ என்று கொண்டாடப்பட்ட சூப்பர் மேன் வாழ்விலும் நிறைய சோகங்கள் இருக்கின்றன.

ஒரு விபத்து இவரை ஒட்டு மொத்தமாக முடக்கிப் போட்டது. திரையில் விண்ணில் பறந்து பல சாகசங்கள் செய்த இந்த துணிவு மனிதர், அந்த விபத்துக்குப் பின் தனது சுண்டு விரலைக்கூட அசைக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கிப் போனார். அந்த சோதனையை ஏற்றுக்கொள்ள முடியாத கிறிஸ்டோபர், தற்கொலை முயற்சிவரை போனார். பின்னர் மனம் மாறி வாழ்க்கையில் துணிவோடு போராடவும் முடிவு செய்தார்.

கிரிஸ்டோபர் ரீவ்
நியூயார்க் நகரில் 1952, செப்டம்பர் 25-ல் பிறந்த இவர் தனது நான்கு வயதை எட்டியபோது பெற்றோர்கள் விவாகரத்து செய்துகொண்டனர். கிறிஸ்டோபர் தனது சகோதரனுடன் தாயாருடன் சேர்ந்து வாழத்தொடங்கினார். சகோதரர்கள் இருவருக்கும் நடிப்பது என்றால் மிக விருப்பம்.

கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் இவருக்கு உலகப் புகழ் பெற்ற ‘ஜூலியட் மேடை கலைப் பள்ளி’யில் நடிப்பு பயிற்சி பெறும் வாய்ப்பு கிட்டியது. அதில் பயின்ற போதே அவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்தன. முதன் முதலாக 1976-ல் புகழ்பெற்ற நடிகையான கேத்ரின் ஹெப்பர்னுடன் இணைந்து நடித்தார். ‘எ மேட்டர் ஆப் கிராவிட்டி’ என்ற இசை நாடகத்தில் நடித்தார். 1978-ல் அவருக்கு சினிமாவில் சூப்பர் மேனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக அப்போது 200 புதிய முகங்களை பல்வேறு கேமரா சோதனைகளுக்கு உட்படுத்தினார்கள். இறுதியில் தேர்வானவர், கிறிஸ்டோபர் மட்டும்தான்.

தொலைகாட்சி தொடரில் கிறிஸ்டோபர்
முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். அதன்பின் 16 திரைப்படங்கள், 12 டெலிஃபிலிம்கள், 150 மேடை நாடகங்கள் என்று நடித்து அசத்தினார். சாகச காட்சிகளில் கூட ‘டூப்’ போடாமல் நடிப்பது இவரின் பலம். நடிப்பைத் தவிர சாகசத்திலும் இவர் கில்லாடி. சாகசத்திற்காகவே விமானம் ஓட்டக் கற்றுக்கொண்டார். ஒரு சிறிய விமானத்தை எடுத்துக் கொண்டு தனியாளாக இயக்கி அட்லாண்டிக் பெருங்கடலை கடந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவருக்கு படகும் ஓட்டத் தெரியும். முத்து குளித்தல், பனி சறுக்கு, குதிரை ஏற்றம் என்று பலவற்றிலும் சமத்தர்.

1995 மே மாதம் 27-ம் தேதி, அவர் வாழ்வையே திருப்பிப் போட்ட நாள். அன்று தனது குதிரை மீது அமர்ந்து சாகசங்கள் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென்று அவரது குதிரை மிரண்டுபோய் அவரை பின்பக்கமாக தூக்கி எரிந்தது. குதிரையின் கடிவாளத்தில் கிறிஸ்டோபரின் கை மாட்டிக்கொள்ள தலைக்குப்புற கீழே விழுந்தார். தலைதான் தரையில் மோதியது. தலையில் பலத்த அடி. அவரின் முதுகெலும்புகள் இரண்டு நொறுங்கின. கழுத்து எலும்புகளும் ஒடிந்தன. அந்த நொடியே அவரது கழுத்துக்கு கீழ் உள்ள உடல் முழுவதும் செயலிழந்தது. மூச்சுக் கூட விடமுடியாமல் தவித்தார். உடனடி மருத்துவம்தான் அவர் உயிரை காப்பாற்றியது.

விபத்துக்குப் பின்
மிக சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் அவரது தலையை மீண்டும் முதுகெலும்போடு மருத்துவர்கள் இணைத்தனர். தனது வாழ்நாளில் ஒவ்வொரு நொடியையும் சுறுசுறுப்புடன் கழித்த அந்த தைரிய மனிதரால், தனது சுண்டு விரலைக் கூட அசைக்கமுடியாத நிலைக்கு போனார் எவ்வளவு பெரிய வேதனை. இந்த வேதனையில்தான் அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தார். பின் தனது மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் வாழவேண்டும் என்று தீர்மானித்தார்.

முதுகெலும்பு காயங்களுக்கான ஆராய்ச்சிக்கு அதிகம் செலவிடும்படி அவர் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டார். 1996-ல் அவரது பெயரிலே ஒரு அறக்கட்டளையை தொடங்கினார். 1998-ல் இவர் எழுதிய ‘ஸ்டில் மீ’ என்ற சுயசரிதை புத்தகம் அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் பட்டியலில் இடம்பெற்றது.

மேடையில் நம்பிக்கை உரை 
உதவியாளர்கள் உதவியோடு உலகில் எங்கிருந்து அழைப்பு வந்தாலும் அந்த அழைப்புகளை ஏற்றுக்கொண்டு மேடையில் தன்னம்பிக்கை உரை நிகழ்த்தினார். இவர் தனது வேதனை எல்லாவற்றையும் மறைத்து பேசும்போது மக்கள் கண்களில் கண்ணீர் கசியும்.

இவருக்கு சிகிச்சை அளித்த வாஷிங்டென் பல்கலைக்கழக மருத்துவர் டாக்டர். ஜான் மெக்டொனால்ட் தன் வாழ்நாளில் தான் சந்தித்தவர்களில் கிரிஸ்டோபர் ரீவ்ஸைப் போன்ற மனோத்திடத்தை வேறு எவரிடத்திலும் கண்டதில்லை என்றும், இதற்கு முன்பு வரை இது போன்ற காயம் ஏற்பட்டவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றுதான் கருதப்பட்டது, ஆனால் ரீவ்ஸ்க்கு பிறகு தன்னம்பிக்கை என்றால் என்ன என்பதை நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

விபத்து நிகழ்ந்ததிலிருந்து கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் ‘சூப்பர்மேன்’ என்ற பெயருக்கேற்ப அசாதாரணமான மனோதிடத்தை உலகுக்கு படம் பிடித்துக்காட்டிய கிரிஸ்டோபர் ரீவ்ஸ், தமது 52 ஆவது வயதில் 2004, அக்டோபர் 10-ல் காலமானார். அவரது உடல் நம்மை விட்டு மறைந்திருக்கலாம் ஆனால் அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் தன்னம்பிக்கை என்ற ஒளி என்றும் இந்த உலகில் மறையாதிருக்கும்.

சுயசரிதை