Header Banner Advertisement

‘தமிழ்நாடு தமிழருக்கே.!’


www.villangaseithi.com

print
‘சலிப்பு, ஓய்வு இரண்டும் தற்கொலைக்குச் சமம்’-இந்த வார்த்தைகளைச் சொன்னவரும், இந்த வார்த்தைகளை வாழ்க்கையாகக் கொண்டவருமான பெரியார், செப்டம்பர் 17, 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இறப்பதற்குச் சில நாட்கள் முன்புவரை தனது கொள்கைகளுக்காகப் பிரசாரம் செய்தவர். தமிழக அரசியல், சமூகம் ஆகியவற்றில் இவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு, இணையான தாக்கம் இதுவரை யாராலும் ஏற்படுத்தப்படவில்லை. ஈரோடு வேங்கட ராமசாமி என்கிற இயற்பெயரைக் கொண்ட பெரியார், சாதி மற்றும் மூட நம்பிக்கைகள் அழியவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

காங்கிரஸில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர். மது ஒழிப்பு, தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் என காந்தியின் பல போராட்டங்களை தமிழகத்திலும், கேரளத்தில் உள்ள வைக்கத்திலும் முன்னெடுத்துச் சென்றவர். பின்னர் திராவிட கழகத்தைத் தோற்றுவித்ததோடு, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவை தன் வாழ்நாள் முழுக்க கொள்கைகளாகக் கடைபிடித்தவர். மூட நம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்க ளும்தான் என்பது அவரது கருத்து. அதனால் இறுதிவரை அவர் ஒரு தீவிர நாத்திகராகவே செயல் பட்டார்.

வசதியான வணிகக் குடும்பப் பின்னணியைக் கொண்ட பெரியார், மிக எளிமையாகவே வாழ்ந்தார். 1929ல் சுயமரியாதையை வலியுறுத்த செங்கல்பட்டில் நடத்திய மாநாட்டில் தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, முன்னுதாரணமாக விளங்கினார். அவரது கருத்துகளைப் பரப்புவதற்காகவே, ‘குடியசு’ நாளிதழை நடத்தினார். ஆங்கிலத்தில், ‘ரிவோல்ட்’ என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கிய தோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றிருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளைப் பேசும் ஆற்றல் கொண்டிருந்த பெரியார், இந்தியாவில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இலங்கை போன்ற நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தன் கருத்துகளைப் பதித்தார். தமிழ் எழுத்துக்களின் சீரமைப்பில் பெரியாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவரின் சமுதாயப் பங்களிப்பிற்காக யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இறுதிக் காலத்தில் குடலிறக்க நோயினால் பாதிக்கப்பட்ட பெரியார், டிசம்பர் 24, 1973ல் தனது 94ம் வயதில் இயற்கை எய்தினார்.