
இரவில் ‘சிப்ஸ்’ கொறித்துக் கொண்டும், ‘ஜோக்’ அடித்துக் கொண்டும் டி.வி. நிகழ்சிகளை பார்ப்பது இரவின் ஆழ்ந்த தூக்கத்தை கெடுக்கும் என்று ஒரு ஆய்வு தற்போது தெரிவிக்கிறது.
கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பாகின்றன. இப்போது கூட டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி இரவில்தான் நடக்கிறது. நல்லவேளை நள்ளிரவுக்கு முன்பே முடிந்துவிடுகிறது.
இப்படிப்பட்ட போட்டிகளை விளையாட்டு ரசிகர்கள் இரவு நேரத்தில் கண்விழித்து டி.வி. பார்ப்பது வழக்கம். அத்துடன் ‘சிப்ஸ்’ போன்ற நொறுக்குத்தீனிகளை கொறிப்பதும், குளிர்பானங்கள் குடிப்பதும் நாகரிக வழக்கமாகி வருகிறது. இது இரவு நேர ஆழ்ந்த நித்திரையை கெடுக்கும் என்கிறது ஆய்வு.
சராசரியாக ஒரு நாளுக்கு ஆண் என்றால் 1600 கலோரியும், பெண் என்றால் 1400 கலோரியும் உணவு தேவை. இந்த உணவில் 25 சதவீதத்துக்கு குறைவாக கொழுப்புச்சத்து இருக்க வேண்டும். ஆனால் 10 துண்டு ‘சிப்ஸ்’ சாப்பிட்டால் அதில் 4 கிராம் கொழுப்புச்சத்து கூடிவிடும். அதாவது நம் உடலில் உடனடியாக 36 கலோரி சேருகிறது. தினமும் ஏராளமாக ‘சிப்ஸ்’ சாப்பிடுவதால் சராசரியாக ஒரு பாக்கெட்டுக்கு 40 கிராம் கொழுப்பும், 360 கலோரியும் உடலில் சேர்கிறது. இதனால் மொத்த கலோரி 2 ஆயிரமாக அதிகரிக்கிறது. இதனால் இரவில் ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை. சிப்ஸை கணக்கில் சேர்க்காமல் நாள் முழுவதும் சாப்பிடும் உணவில் கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தாலும், அந்தக் கொழுப்பு இரவில் ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும்.
இந்தியாவைப் பொறுத்த வரை ஒருவரது உணவில் 45 சதவீதம் கொழுப்புச்சத்து உணவாகவே இருக்கிறது. இதனுடன் இரவு நேரத்தில் சிப்ஸ் அல்லது நொறுக்குத்தீனிகளை கொறிப்பதால் கொழுப்புச்சத்து மேலும் அதிகரித்து தூக்கத்தை கெடுக்கிறது.
இரவு உணவு முடிந்த பின் குறைந்தபட்சம் 3 மணி நேரத்துக்குப் பிறகே தூங்கச் செல்ல வேண்டும். இரவு நேரத்தில் காலம் தாழ்த்தி சாப்பிடுவதும், தூக்கம் விழிப்பதற்காக நொறுக்குத்தீனிகள் கொறிப்பதும் தூக்கத்தை கெடுக்கும். ஒருநாள் இரவின் நல்ல தூக்கம் 10 வேலை உணவு தரும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரும். அதனால் நல்ல இனிமையான ஆழ்ந்த உறக்கத்தை துரத்தும் சிப்ஸ்களை தவிர்ப்பது நல்லது.