
print
அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் நிறுவனம் கடலில் ஒரு ஆய்வை செய்து வருகிறது. அந்த ஆய்வில் அண்டார்டிக் துருவப் பகுதியிலுள்ள ராஸ் கடல் பகுதிக்கு ஒரு தீவு நகர்ந்து கொண்டே வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் அகலமும், 158 கிலோமீட்டர் நீளமும், 228 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பனித்தீவு மிதந்தபடி நகர்ந்து கொண்டு இருக்கிறது.
சாதரணமாக பனிப்பாறைகள் கடலில் மிதக்கும்போது, அவற்றின் உச்சி மட்டுமே நீர்பரப்புக்கு மேல் தெரியும். ஆனால், இந்த பனித் தீவு அப்படியில்லாமல் அதன் பெரும் பரப்பளவு தண்ணீருக்கு வெளியே தெரிகிறது. இதுவரை இவ்வாறு காணப்பட்ட பனிப்பாறைகளில் இதுவே மிகப் பெரியது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இதுவொரு நன்னீரால் உருவான பனித்தீவு. இதில் உள்ள தண்ணீரை கொண்டு 30 லட்சம் மக்களுக்கு 670 வருடங்கள் எந்தவித தடையும் இல்லாமல் தொடர்ந்து தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். அந்தளவிற்கு இதில் தண்ணீர் நிறைந்துள்ளது. இந்தத் தீவு இப்படி மிதந்து செல்வதால் கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை என்றாலும் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகிறார்கள்.
இதன் குளிர்ச்சியால் கடலின் வெதுவெதுப்பு தன்மை பாதிக்கப்படும் என்கிறார்கள். பனித்தீவு உருகி நல்ல தண்ணீர் கடல்நீரில் கலக்கும்போது கடல் நீரின் தன்மையில் மாற்றம் ஏற்படும். இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்படையும். கடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அது பொதுவான சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
மிதக்கும் பனிப்பாறைகளில் மிகப் பெரியது அண்டார்டிகா கண்டத்தின் கரையோரமாக கடலில் 154 கிலோ மீட்டர் நீளமும் 35 கிலோ மீட்டர் அகலமும் 350 மீட்டர் உயரமும் கொண்டது. மனிதனால் சரியாக அளக்கப்பட்ட கடல் பனிப்பாறைகளில் இதுவே மிகப் பெரியதாக இருந்தது. இந்தப் பனிப்பாறை ஹாங்காங் நாட்டின் அளவுக்கு நீளமும் அகலமும் கொண்டது. இந்தப் பனிப் பாறையைவிட இப்போது கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் பனிப்பாறை அதாவது பனித்தீவு இன்னும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.