
print
பெரிய அறையிலோ கோயில்களிலோ பாறைகள் சூழ்ந்த மலைப் பகுதியிலோ நின்று உரக்க கத்தினால் அந்த ஒலி சுவரில் பட்டுத் திரும்பி வரும். இதை எதிரொலி என்கிறார்கள். ஒலியானது அலைகளாக மாறி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகிறது. அந்த ஒலி அலைகள் காற்று, நீர், திடப்பொருள் வழியாகவும் பரவுகிறது.
![]() |
எக்கோ பாயிண்ட் |
ஒலியின் திசைவேகம் வினாடிக்கு 340 மீட்டர் ஆகும். நாம் பேசும் போது ஒலி அலைகள் எல்லா திசைகளிலும் பரவுகின்றன. இந்த அலைகள் சுவர் அல்லது மற்ற தடைகளை சந்தித்ததும் மீண்டும் திரும்பி விடுகின்றன. இவ்வாறு எதிரொலித்து வரும் ஒலியே எதிரொலியாகும்.
இப்படி எதிரொலி நம்மிடம் வந்து சேருவதற்கும் ஒரு தொலைவு இருக்க வேண்டும். குரல் எழுப்புபவர் இருக்கும் இடத்தில் இருந்து குறைந்தது 17 மீட்டர் தொலைவுக்கு அப்பால் தடை இருந்தால் மட்டுமே எதிரொலி உண்டாகும்.
எந்த ஒரு ஒலியும் நமது காதுகளில் 1/10 வினாடி நேரம் நிலைத்து நிற்கும். இந்த வினாடியில் வேறெந்த ஒலி காதில் வந்து விழுந்தாலும் முந்தைய ஒலி காதில் நிலைத்து இருப்பதால் இந்த ஒலியை காது உணராது.
ஆகவே ஒலியை தடுக்கும் பொருள் 17 மீட்டருக்கு (55 அடி) அப்பால் இருந்தால்தான் பேசுபவரின் வாயில் இருந்து வெளிவரும் ஒலி 1/10 வினாடி நேரத்தில் பொருளை அடைந்து திரும்ப வருவதற்கு சரியாக இருக்கும். இந்த நேரத்தில் காது முதல் ஒலியின் பாதிப்பில் இருந்து விடுபடும். இந்த நிலையில் காது எதிரொலியை கேட்டு உணர்கிறது. இப்படி நம் செவிகளை அடைய முடியாத எதிரொலியையே ‘கேளா எதிரொலி’ என்று அழைக்கிறார்கள்.
மரம், சணல், அட்டை, துணி போன்ற பொருட்கள் ஒலியை ஈர்த்துக் கொள்கின்றன. சுவர்கள், பாறை, தண்ணீர் ஆகியவை ஒலியை திருப்பி அனுப்பி விடுகின்றன. இன்றைய காலக்கட்டத்தில் எதிரொலியைக் குறைத்து ஒலியை நல்ல முறையில் பரவச செய்யும் சாதனங்களை பயன்படுத்துகிறார்கள்.
இன்றைய தியேட்டர்களும், அரங்குகளும் வட்டவடிவில் மூலைகளைக் கொண்டு அமைக்கிறார்கள். இதனால் ஒலி அலைகள் ஈர்க்கப்படுகின்றன அல்லது சிதறடிக்கப்படுகின்றன. இப்படித்தான் உருவாகும் எதிரொலி கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் தியேட்டர்களில் திரைப்படம் பார்க்கும் போது வசனங்கள் எதிரொலிப்பதில்லை.