தமிழ் மொழியை எப்படி நமது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கி விட்டார்களோ.. அப்படியேதான் நமது பாரம்பரிய செல்வங்களான நாட்டு இன மாடுகளையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.
பொதுவாக நமது நாட்டில் நாம் அருந்தும் பாலில் 60 சதவீதம் வரை ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜெர்ஸி போன்ற பல இன பசுக்களிலிருந்து கிடைக்கும் பால் ஆகும். இந்த இறக்குமதி இன பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலில் நமக்கு ஒத்துக் கொள்ளாத சில அம்சங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று ஏ-1 பீட்டா-காஸெய்ன் என்ற புரதத் துணுக்கு. இது இயற்கையான, பாரம்பரிய மரபணுவைக் கொண்ட புரதத் துணுக்கு அல்ல. இது பிறழ்ந்த மரபணுவைக் கொண்டதாகும் .
இந்தப் பாலை தொடர்ந்து அருந்தும்போது நமது உடலில் உள்ள நரம்பு மண்டலத்திலும் நாளமில்லா சுரப்பிகளிலும் நோய் தடுப்பு மண்டலத்திலும் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. அதனால் ரத்தக்குழாயில் படலம் படிதல், ரத்தக்குழாய் அடைப்பு, இதய நோய், மனச்சிதைவு, மதி இறுக்கம், முதல் நிலை வகை நீரிழிவு போன்ற நோய்களை உண்டுபண்ணுகிறது.
 |
காங்கேயம் காளை |
மேலும் குழந்தை இறப்பையும் அத்துடன் மனித உடல் இயற்கையாகவே பெற்றுள்ள நோய் எதிர்ப்பு திறனில் குறைபாட்டையும் ஏற்படுத்துகின்றன. பசுவின் பாலுக்கு அமிர்தம் என்ற பெயருண்டு. அமிர்தத்திற்கு நஞ்சு போக்கும் பொருள் எனவும் அர்த்தமுமுண்டு. ஆனால் நாம் அமிர்தம் என்ற பெயரில் நஞ்சை அருந்துகின்றோம்.
பிரச்சினைக்குரிய இந்த ஏ-1 பிறழ்வு புரதம் இந்திய மண்ணுக்கே உரிய நாட்டு மாடுகளில் இருப்பதில்லை. மாறாக எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாத ஏ-2 இணை மரபணு புரதம் மட்டுமே காணப்படுகின்றது.

எனவேதான் நாட்டு மாடுகளின் பாலை மட்டுமே அருந்த வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் சொல்லத்தொடங்கியுள்ளார்கள். அந்த மாடுகளுக்கும் ஹார்மோன் ஊசிகள், ஊக்க மருந்து ஊசிகள் எதுவும் போடாமல், மாட்டுத் தீவனங்களைத் தவிர்த்து, இயற்கையான உணவு அளித்து அதன் மூலம் கிடைக்கும் பாலே நல்ல ஆரோக்கியம் கொண்டது.
இயற்கை உணவு என்பது நெல்லின் உமி, தவிடு, வைக்கோல், கோதுமையின் உமி, தவிடு, கோ-4 என்ற புல்வகை, வேலி மசாலா, சோளத்தட்டை, சோள மாவு, அகத்திக்கீரை, கடலைப் பிண்ணாக்கு, பருத்திக் கொட்டை பிண்ணாக்கு போன்றவைதான். இப்படி இயற்கையான நல்ல தீவனங்களை கொடுப்பதன் வழியாக மட்டுமே பாலின் தரத்தை மேம்படுத்த முடியும்.

இயற்கை முறையில் தயாராகும் பாலுக்கு விலையும் கூடுதலாக கிடைக்கிறது. ஒரு லிட்டர் பால் ரூ.65-க்கும் மேல் விற்பனை ஆகிறது. நல்ல தரமான பொருட்களுக்கு மக்கள் கூடுதலான விலை கொடுக்க தயாராக இருப்பதால் விவசாயிகளுக்கும் நாட்டு மாடுகளை வளர்ப்பது லாபகரமான தொழிலாக மாறி வருகிறது. ஒரு சராசரி நாட்டு மாட்டின் விலை ரூ.35,000. உயர் ரக நாட்டு மாட்டின் விலை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை விலைக்கு கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல், மாட்டின் சிறுநீர், சாணம் போன்றவை மருத்துவ குணம் கொண்டவை என்று அவற்றை காலகாலமாக பயன்படுத்தி வருகிறோம். இதிலும் கூட நாட்டு மாடுகளின் சாணமும் சிறுநீருமே சிறந்தது கலப்பின மாடுகளின் கழிவுகள் நல்லதல்ல என்கிறார்கள்.
இந்திய நாட்டு காளைகளின் படங்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை அழிக்கத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன.
நாட்டு மாடுகளை வளர்த்து நம் பாரம்பரியத்தை காப்போம்!