
நாம் எவ்வளவுதான் கோடி கோடியாக சம்பாதித்து பணம் சேர்த்தாலும் அவற்றை அனுபவிக்க நாளைக்கு நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் பூமி வேண்டும். இயற்கை கொடுத்த அந்த அற்புத வாழ்வாதாரத்தை சுடுகாடாக மாற்றிவிட்டு, வெறும் பணத்தை மட்டும் வைத்து எந்த பெரிய கடைகளிலும் இயற்கையை விலைக்கு வாங்க முடியாது. அதனால் நாம்தான் மாறியாக வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
வேறு வழியில்லை. “நீ உயிரோடிருக்க வேண்டுமானால் இதைச் செய்துதான் ஆக வேண்டும்” என யாராவது துப்பாக்கி முனையில் மிரட்டினால், அது எப்பேர்ப்பட்ட வேலையாக இருந்தாலும் செய்துதான் முடிப்போம். அப்படி, இயற்கை நம்மை இப்பொழுது மரண விளிம்பில் நிற்க வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த உண்மையை உணர்ந்து மாறாவிட்டால் பூமி துளியும் தயங்காமல் நம்மை தள்ளி விட்டு விடும் என்று மேலும் பயமுறுத்துகிறார்கள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள்.
இதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் செய்யவேண்டியது என்று சிலவற்றை வரையறை செய்கிறார்கள். அதன்படி முதலில் பிளாஸ்டிக் போன்ற செயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு உருவாகப்படும் பொருட்களை தவிர்ப்போம். இயற்கைப் பொருட்களையே முடிந்த அளவு பயன்படுத்துவோம். செயற்கைப் பொருட்களை தவிர்த்தாலே மக்காத குப்பைகள் உருவாகாது. இது பூமிக்கு நாம் செய்யும் மிகப் பெரிய நன்மை. இயற்கைப் பொருட்களையும் ஒரேயடியாக இந்த தலைமுறையிலேயே செலவழித்து தீர்த்துவிடாமல் குறைவாக பயன்படுத்தினால் இயற்கை நம்மை கைவிடாமல் வெகு நாட்கள் காக்கும்.
இரண்டாவது தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்ற எல்லாவற்றையும் சிக்கனாமாக பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டைக் குறைக்க குறைக்க உற்பத்தியின் அளவு குறையும் இதனால் இயற்கையை சுரண்டும் பாதிப்பும் குறையும். தொழிலுக்கோ வேலைவாயப்புக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. அதற்கடுத்து குப்பையைக் குறைப்பது. நாம் வெளியில் கொட்டும் குப்பை குறைய குறைய பூமித்தாய் மனம் மகிழ்வாள். நிலம், நீர், காற்று என எல்லாவற்றையும் தூய்மையாக நமக்கு வழங்குவாள்.
ஆட்சியாளர்கள் கிடக்கட்டும், அவர்களை பின்னால் பார்த்துக் கொள்ளலாம். நாம் முதலில் மாறுவோம். நம் பிள்ளைகளை மாற்றுவோம். சுற்றுச்சூழல் குறித்த மாற்றத்தை நாமே தொடங்குவோம்..!