Header Banner Advertisement

நூலகம் ஒரு கோவில், நூல்கள் தெய்வம்!


www.villangaseithi.com

print
‘அறிவு ஆற்றலுடையது’ என்பார்கள். ஆமாம், பல வெற்றியாளர்கள் தாங்கள் பெற்ற அறிவாற்றலால்தான் வாழ்க்கையில் தங்களை நிரூபித்துள்ளனர். கல்வியால் அறிவாற்றலைப் பெற முடியும். கல்வி இளமையில் தொடங்கி இருபதுகளில் வளர்ச்சி அடைகிறது. வெற்றிக்குத் தேவை நல்ல சிந்தனை. நல்ல சிந்தனைக்கு தேவை நல்ல நூல்கள். நல்ல நூல்கள் சிந்தனையை சிறகடிக்கும். சிறகடித்து வானம் தொடும். பார்த்தல், கேட்டல் அறிவை விட, படித்தல் அறிவு சிறந்தது. வாசித்தல் அனுபவத்திற்கு வார்த்தைகள் இல்லை.

புத்தகங்களும், ஆசிரியர்களும் கடைசி வரை நல்ல வழிகாட்டிகளாக இருப்பார்கள். அவர்களே நமது நல்ல நண்பர்கள். இளமையில் நமக்கு நிறைய நண்பர்கள் இருக்கலாம். இளமை பருவத்திற்குப் பிறகு தனிமையை உணரும் போது புத்தகம் படித்தல்தான் உண்மையான துணையாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கும்.

ஒருவனை ‘புழு’ என்றால் கோபம் கொள்வான். புத்தக விரும்பியை ‘புத்தக புழு’ எனக் கூறி பாருங்கள். ரசித்து சிரிப்பான்.! புத்தக பைத்தியம் என்றால் புன்னகை பூப்பான்.! படித்தவர்களுக்கே அதன் சுகம் தெரியும். புத்தகப் பிரியர்களுக்கு புத்தகம் சொர்க்கம். எழுத்துக்கள் அமுதம். புத்தகம் நமக்கு தோழன். புத்தகம் நமது அறிவின் குரு. புத்தகம் வாழ்வின் வழிகாட்டி. கன்னிமாரா நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் படித்தவர் என்று அண்ணாவை சொல்வார்கள். தூக்கு மேடைக்குச் செல்லும் சில நிமிடங் களுக்கு முன்னால்கூட லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலை வாசித்து விட்டுதான் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங்.

ராபர்ட் சவுதே எனும் ஆங்கிலக் கவிஞர், தன் கடைசிக் காலம் வரை புத்தகங்களே தனக்கு உண்மையான நண்பர்களாக இருந்தன என்று கூறியுள்ளார். புத்தகம் படிப்பது ஒரு நல்ல பொழுது போக்காகவும், அதிக மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கும். புத்தகம் படிப்பது மனித நேயம் வளர்ப்பதற்கும் புதுமையாகச் சிந்திப்பதற்கும், சமுதாயத்தைப் புரிந்து கொள்வதற்கும், பல்துறை அறிவு வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் தொடர்ந்து நூலகம் செல்வதன் மூலமும் அங்கு புத்தகங்களைப் படிப்பதன் மூலமும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

புத்தகங்கள் மட்டும் இல்லையென்றால் கடவுள் இல்லை. நீதி சகிக்க முடியாததாக இருக்கும். இயற்கை விஞ்ஞானம் குத்திட்டு அசையாமல் நின்றுவிடும். தத்துவங்கள் ஊமையாகிவிடும். சகலமும் இருண்டு விடும். வாசிப்பின் பலத்தை இப்படி மிகைப்படுத்தியுள்ளனர் அறிஞர்கள். அவர்கள் சொல்வது போல் புத்தகம் என்ன செய்யும்? புத்தகம் புது உலகம் காட்டும். புரட்சி செய்யும். புதுமை படைக்கும். தாலாட்டும். தாகம் தீர்க்கும். வலிக்கச் செய்யும். வலியை மறக்கச் செய்யும். நல்ல வாசிப்பாளருக்கு, ‘நூலகம் ஒரு கோவில், நூல்கள் தெய்வம்’.