Header Banner Advertisement

பத்திரிகைகள் கண்களை திறந்து விட்டவர்.!


www.villangaseithi.com

print
இலக்கியம், பத்திரிகை, நாடகம், சினிமா முதலிய துறைகளில் சிறப்பும், திறமையும் மிக்கவர்களுக்கு அமெரிக்காவில் ஆண்டுதோறும் ‘புலிட்சர் விருது’ வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. ஜோசப் புலிட்சர் எனும் சாமானியர் பின்னாளில் பத்திரிகை உலகில் பல சாதனைகளை நிகழ்த்தியவர். புலிட்சரின் வாழ்க்கை சுவாரஸ்யமும், திருப்பங்களும் நிறைந்தது.
ஜோசப் புலிட்சர்
1864ல் லண்டனுக்கு வந்த ஹங்கேரிய இளைஞரான ஜோசப் புலிட்சருக்கு அப்போது வயது 17. பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருவதுதான் அவர் கனவு. ஆனால், உடற்கட்டும் இல்லை, கண்பார்வையில் குறைபாடு வேறு. முதலில் நிராகரிக்கப்பட்டாலும், பின்னர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த யூனியன் படைகளுக்கு ஆள் திரட்டிய ஏஜென்டின் சிபாரிசால் ராணுவத்தில் சேர்ந்தார்.

அமெரிக்காவில் சிறிது காலம் ராணுவச் சேவையில் ஈடுபட்டபின், செயிண்ட் லூயிக்கு சென்றார். சின்ன சின்ன தொழில்களை செய்து பிழைத்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மனிய பத்திரிகை ஒன்றில் நிருபராக சேர்ந்தார். நாலே ஆண்டுகளில் அதாவது அவரது 24ஆவது வயதில் அந்த பத்திரிகையின் உரிமையாளர் களில் ஒருவராகவே ஆனார். அதுமட்டுமா…? நஷ்டத்தில் நிறுத்தப்படும் சூழலில் இருந்த வேறொரு பத்திரிகையைக் குறைந்த விலைக்கு வாங்கினார். அதை தரகர் ஒருவர் மூலம் மற்றொருவருக்கு கைமாற்றினார். இதன் மூலம் 7,000 பவுண்டுகளைச் சம்பாதித்தார்.

இதுமட்டுமா…? பின்னர் புலிட்சர் தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. ஆங்கில மொழி, சட்டம், அரசியல் ஆகியவற்றில் வல்லுநரானார். சரியாக நடத்தப்படாமல் இருந்த மேலும் 2 ஆங்கில நாளிதழ்களை விலைக்கு வாங்கினார். இரண்டையும் ஒன்றாக இணைத்து ‘செயிண்ட் லூயி போஸ்ட் டெஸ்பாட்ச்’ என்ற பத்திரிகையை உருவாக்கினார். அரசியல் வாதிகளின் முகத்திரைகளையும் அரசாங்கத்தின் திரைமறைவு நிகழ்வுகளையும் போர்க் கொடூரங்களையும் தைரியமாக தோலுரித்துக் காட்டினார்.

1972ல் நடந்த வியட்நாம் – அமெரிக்க போரின் கோர காட்சி. புலிட்சர் விருதைப் பெற்ற புகைப்படம் இது.
‘இன்றைக்கு நம்மைப் பற்றி என்ன எழுதியிருக்கின்றனர்’ என்று அதிகாலையிலேயே பயத்துடன் இவரது பத்திரிகையை படித்த அரசியல்வாதிகள்தான் அதிகம். சக்தி மிக்க செய்தி பத்திரிகை என்ற அங்கீகாரம் வாசகர்களிடம் இருந்து இந்த பத்திரிகைக்கு கிடைத்தது. நாளடைவில் தனது ‘நியூயார்க் வேர்ல்ட்’ என்ற பத்திரிகையின் மூலம் அரசியலில் புலிட்சர் தனி செல்வாக்குப்பெற்றது தனிக்கதை.

40 வயதில் அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராவோம் என அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால், பல பத்திரிகைகளின் கண்களை திறந்து விட்ட புலிட்சர் தன் கண்பார்வை முழுவதும் இழந்தார். பார்வையை இழந்தாலும் சிறந்த அறிவாளிகளின் துணை கொண்டு மேலும் சிறப்படைந்தார்.