Header Banner Advertisement

பத்மாசனி எனும் மறக்கப்பட்ட பெண் போராளி!


3

print
பத்மாசனி இந்த பெயரை யாரும் கேள்விபட்டிருக்க மாட்டார்கள். இந்தப் பதிவை முழுமையாக படித்து முடித்தவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்தப் பெயரை மறக்கமாட்டார்கள். தேசத்தின் விடுதலைக்காக மாபெரும் அர்ப்பணிப்பை அளித்தவர். இவரைப் பற்றி படித்ததும் இவரின் புகைப்படம் தேடி அலைந்ததை தனி பதிவாக போடலாம். இறுதியாக சமீபத்தில் மறைந்த தியாகி மாயாண்டி பாரதி அய்யாவிடம்தான் பத்மாசனி படத்தை வாங்கினேன். 2003 சுதந்திரதின சிறப்புமலரில் நான் எழுதிய இந்த கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சும்மா வந்துவிடவில்லை சுதந்திரம். 200 ஆண்டுகளுக்கு மேலாக அந்நியர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த இந்த தேசத்தின் சுதந்திரம் பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் தியாகத்தால் உருவானது.

சுதந்திர போராட்டத்தில் தன் குழந்தைகளையே பலியிட்ட ஒரு வீரத்தாயின் வரலாறு இன்று பலருக்கும் தெரியாது. அந்த தாயின் பெயர் பத்மாசனி. விடுதலைக்காக சிறை சென்ற முதல் பெண். பாரதியாரின் பாடல்களை பட்டிதொட்டி எல்லாம் பரப்பிய முதல் பெண்ணும் இவர்தான்.

பத்மாசனி
மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் சோழவந்தானில் 1897-ல் பிறந்தவர் இவர். மதுரையைச் சேர்ந்த சீனிவாசவரதன் என்பவரை திருமணம் செய்து கொண்டவர். மதுரையின் மருமகள்.

சீனிவாசவரதனும் மகாகவி பாரதியாரும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒருமுறை பாரதியார் ‘உன் சொத்தை விற்றேனும் பத்திரிக்கை நடத்த பணம் அனுப்பு’ என்று கடிதம் எழுதியிருந்தார். மறுநாளே தனது சொத்தை விற்று பாரதியாருக்கு பணம் அனுப்பிவைத்தவர் வரதன். அத்தனை நெருக்கம்.

இன்றைக்கு வேண்டுமானால் பாரதியார் பாடல்களை நாம் எல்லா இடங்களிலும் கேட்கலாம். ஆனால் அன்றைக்கு அப்படியில்லை. பாடல்கள் வெறும் காகிதத்தில் மட்டுமே இருந்தன. அதை தெரு தெருவாக பாடி, பஜனைகளில் பாடி மக்கள் மத்தியில் எழுச்சி ஊட்டியவர்கள் சீனிவாசவரதனும் பத்மாசனியும்தான்.

1922-ல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதற்காக வரதன் கைது செய்யப்பட்டார். சேதி கேட்டு ஓடிவந்த பத்மாசனி தனது கணவருக்கு திலகமிட்டு மாலை அணிவித்து சிறைக்கு அனுப்பி வைத்தார்.

அதுவரை கணவருக்கு உறுதுணையாக இருந்த பத்மாசனி முழுமூச்சாக நாட்டின் விடுதலைக்காக தனந்தனி ஆளாக போராட்டத்தில் குதித்தார். தமிழ்நாட்டில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண்மணி என்ற பெருமை இவரை வந்து சேர்ந்தது.

கணவர் சிறைக்கு சென்றபின் தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். தன்னுடைய தங்க நகைகள் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டார். தலைக்கு என்னை தேய்த்துக்கொள்ள மாட்டார். ஏகப்பட்ட வசதியிருந்தும் ஒருவேளை மட்டுமே உணவருந்தினார். அதுகூட மோர் சாதமும் பட்டமிளகாய் துவையலும்தான். தான் செல்வந்தராக இருந்தும் அந்த வருவாயில் சாப்பிடாமல் ராட்டையில் நூல்நூற்று அதில் வரும் வருமானத்தின் மூலமே சாப்பிட்டார்.

தினமும் மாலை நேரத்தில் பாரதியார் பாடல்களை பாடியபடியே வீடுவீடாகச் சென்று கதர் விற்று வருவார். சுதந்திரத்திற்கு எதிராக இருப்பவர்களையும், ஆங்கிலேய அரசிடம் வேலைப் பார்ப்பவர்களையும் கூட கதர் வாங்க வைத்துவிடுவார். அவர் பேச்சில் அத்தனை வல்லமை இருந்தது. பெண்கள் என்றாலும் ஒருமுழம் ரவிக்கைத்துணி வாங்க வேண்டும் என்பார்.

பெண்களும் விடுதலைப் போரில் ஈடுபட வேண்டும் என்றார். “சாவித்திரி பிறந்த நாடு. சந்திரமதி, சீதை வாழ்ந்த நாடு, தன்னை மானபங்கம் படுத்திய துரியோதனன் ரத்தத்தை எடுத்து சடை முடிந்து வீரசபதம் நிறைவேற்றிய பாஞ்சாலி வாழ்ந்த நாடு என்று பழம் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. இப்பெண்மணிகள் வாழ்ந்த நாட்டில் பிறந்த நாம் இனி கிழவிகள், தவசிகள் போல் பேசுவதில் மகிமையில்லை. இந்தியா முழுவதும் விடுதலை அக்னி ஜுவாலையில் எரிகிறது. இந்தியப் பெண்களே! இந்த அக்னியில் நீங்களும் இணைந்திடுங்கள்.” இவரின் பேச்சு பல பெண்களை சுதந்திர போராட்டத்திற்கு இழுத்து வந்தது.

1930-ல் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த பத்மாசனி மதுரை ஜான்சி ராணி பூங்கா முன் பேசிய பொதுக்கூட்டத்தில், “போலீஸார் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தேசிய இயக்கத்தில் பங்கு பெற வேண்டும்.” என்றார். இப்படி பேசியதை கேட்ட பின் ஆங்கிலேய அரசு சும்மா இருக்குமா பத்மாசனியை கைது செய்து 6 மாத சிறையில் தள்ளியது.

சிறை உணவு அவருக்கு பிடிக்கவில்லை. மூன்று மாத கர்ப்பம் என்பதால் குமட்டலும் வாந்தியும் இருந்தது. சிறையில் தானே சமைத்துக்கொள்ள அனுமதிகேட்டு ஒரு வாரம் உண்ணாவிரதம் இருந்தார். கர்ப்பவதிக்கான ஊட்டச்சத்து உணவு இல்லாததாலும் உடல்நிலை மோசமாக இருந்ததாலும் கர்ப்பம் கலைந்தது.

சிறையில் இருந்து வெளிவந்ததும் மீண்டும் போராட்டத்தில் குதித்தார். அன்றைய காலகட்டத்தில் பொதுக்கூட்டம் என்றால் இரண்டு விஷயங்கள்தான் பெரிதாகப் பேசப்படும். ஒன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை, மற்றொன்று வெள்ளையர்கள் லாலாலஜபதிராயை தடியால் அடித்துக் கொன்றது. இந்த இரண்டு சம்பவங்களுமே இந்தியர்கள் நெஞ்சில் நெருப்பாக கனன்று கொண்டிருந்தன.

இதைப் பற்றி பத்மாசனி பேசும் போது அனல் தெறிக்கும். இவரின் பேச்சு என்றாலே அக்கம் பக்க ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் ஒன்று கூடிவிடுவார்கள். அவரது குரல் வெண்கலம் போல் கணீரென்று இருக்கும். பேச்சில் உணர்ச்சியும் வேகமும் குவிந்துக் கிடக்கும். மரக்கட்டைக் கூட வீறுகொண்டு எழும். தொண்டர்கள் பாதி கூட்டத்திலே ஆவேசமாக எழுந்து, இப்போதே வெள்ளையர்களை கூண்டோடு அழித்துவிடுகிறோம் என்று புறப்படுவார்கள். அத்தகைய வீரம் அவரது பேச்சில் இருக்கும்.

நாட்டின் விடுதலையை தவிர வேறு எதைப்பற்றியும் சிந்தனை செய்யாத பத்மாசனிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து இறந்திருந்தன. தேச சேவைக்காக தன்னை அர்பணித்துக் கொண்ட அவருக்கு தன் செல்வங்களை கவனிக்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் இரண்டு குழந்தைகளுமே ஒரு வயதை அடையும் முன்னே இறந்து போயிருந்தனர்.

அப்போது நான்காவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார். சுப்பிரமணியசிவம் காவிரி நடையாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்த போது கரு 8 மாதமாக வளர்ந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் குழந்தைப்பிறக்கலாம் என்ற நிலை. தலைவர்கள் எல்லாம் தடுத்தார்கள். நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்றார்கள்.

விடுதலையைத் தவிர எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல என்று கலந்து கொண்டார். வழிநெடுக சுதந்திரப் பிரச்சாரம், பாரதியார் பாடல்கள், சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தந்த தியாகிகளின் வரலாறு என்று நடைப் பயணம் முழுவதும் சுதந்திர வேட்கை ஜோதி சுடர்விட்டு எரிந்தது. எட்டு மாத கர்ப்பத்துடன் 48 மைல் தூரம் நடந்தே வந்தார்.

ஒகனேக்கல் வரை ஒன்றாக சென்ற காவிரி யாத்திரை அதன்பின் இரண்டாக பிரிந்தது. ஒன்று திருப்பத்தூர், வாணியம்பாடிக்கும், மற்றொன்று தர்மபுரிக்கும் சென்றன. பத்மாசனி தருமபுரி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி, ஓசூர் வரை சென்று பிரச்சாரம் செய்தார்.

அந்த நேரத்தில் அவருக்கு பிரசவம் ஆனது. அழகான பெண் குழந்தை பிறந்தது. கடுமையான குளிர், பாதையோரம் தங்குவதற்கு நல்ல இடம் வேறு இல்லை. பிறந்த மூன்றாவது நாளில் அந்த குழந்தையும் இறந்தது. அம்மையாரின் உடலும் மோசமாக பாதிக்கப் பட்டது. ஓய்வுக்காக உடல் கெஞ்சத் தொடங்கியது. சில நாட்கள் மட்டும் ஓய்வெடுத்தார்.

உடலில் கொஞ்சம் தெம்பு வந்ததும் மீண்டும் நடக்கத் தொடங்கினார். பத்மாசனியின் பேச்சு மகாத்மா காந்தியடிகளையும் கவர்ந்திருந்தது. பெல்காமில் காந்தி தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக பத்மாசனியை காந்தி அழைத்திருந்தார்.

விடுதலைக்காகவே தனது மூன்று குழந்தைகளையும் பலிகொடுத்த இந்த தாய் இந்தியாவின் விடுதலையை பார்க்காமலே இந்த மண்ணை விட்டு மறைந்தார். தன் உடல்நிலையைப் பற்றி கவலைப் படாமல் நாட்டைப்பற்றியே சிந்தித்த இவர் கடைசியில் கடுமையான ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டார். 14.1.1936 அன்று மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு விண்ணுலகம் சென்றார்.

இப்படி நாம் அறியாத பல தியாகிகளின் மதிப்புமிக்க தியாகத்தால்தான் இந்த சுதந்திரத்தை பெற்றிருக்கிறோம் என்ற எண்ணமே மனதை அழுத்துகிறது.

ஜெய்ஹிந்த்!