
print
பனை மரத்தை தமிழர்களோடு ஒப்பிட்டு சொல்கிறார்கள். ஆனால், பனை மரம் தென்னாப்பிரிக்கா உட்பட பல நாடுகளில் காணப்படுகின்றன. பனை மரத்தின் அனனைத்துப் பகுதிகளும் மனிதனுக்கு பயன்படுகிறது. பனைமரத்தின் முக்கிய விளைபொருளாக பதநீரை சொல்லலாம்.
பனைமரத்தில் இருக்கும் மஞ்சரிகளில் இருந்து பதநீரை எடுக்கிறார்கள். இந்த மஞ்சரியில் ஆண் மஞ்சரி, பெண் மஞ்சரி என்று இரண்டு வகையுண்டு. இரண்டில் இருந்துமே பதநீரை எடுக்கலாம். இந்த பதநீர் சுவை மிக்கதாகவும் கொஞ்சம் அமிலத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். காலை மற்றும் மாலையில் எடுக்கப்படும் பதநீர் சுவையாக இருக்கும்.
மழை மற்றும் காற்று அதிகம் வீசும் காலங்களில் பதநீரின் தரம் மிகவும் குறைந்துவிடும். பொதுவாக ஒரு பனைமரம் ஒரு வருடத்தில் 3 முதல் 5 மாதங்களுக்கு பதநீரை சுரக்கும். அதிலும் மூன்று மாதங்கள் மட்டுமே அதிகமாக கிடைக்கும். பதநீர் பெற இடையூறாக இருக்கும் சில ஓலைகளை வெட்டி எடுத்துவிட்டால் போதும். இந்த ஓலை வெட்டுதலை 30 சதவீதம் வரை அதிகப்படுத்தினால் பதநீர் சுரப்பு காலம் மேலும் அதிகரிக்கும். அதைவிட அதிகமாக ஓலைகளை வெட்டினால் பதநீர் சுரப்பு குறைந்து போகும் அபாயம் இருக்கிறது.
பெண் பனைகள் எப்போதும் ஆண் பனைகளைக் காட்டிலும் 33 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கூடுதலான பதநீரை தரும். ஆண் பனைகளில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையும், பெண் பனையில் பிப்ரவரி முதல் மார்ச் வரையிலும் பதநீர் கிடைக்கும்.
ஒரு பனை மரம் 150 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டது. 12 ஆண்டுகளில் இருந்து பதநீர் சுரக்கத் தொடங்கும். முதல் ஆண்டு 60 லிட்டர் பதநீர் கிடைக்கும். பின் அடுத்துவரும் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு 10 லிட்டர் என்ற கணக்கில் கூடுதலாக கிடைத்துக் கொண்டே வரும். இந்த அளவு 100 லிட்டரை அடைந்தவுடன் மேற்கொண்டு கூடாமல் அதே அளவில் தொடர்ந்து கிடைக்கும். சில மரங்கள் அபூர்வமாக 200 லிட்டர் பதநீரையும் தரும். இப்படியே 100 ஆண்டுகளுக்கும் மேலாக பதநீர் தொடர்ந்து கிடைக்கும். அதன்பின் படிப்படியாக குறைந்து 150 வயதில் முற்றிலுமாக நின்று போகும்.
ஒவ்வொரு பனை மரமும் பருவ காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு லிட்டரிலிருந்து 12 லிட்டர் வரை பதநீர் தரும். பதநீரின் நன்மைகள் ஏராளம். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. கோடையில் நிலவும் அதிக வெப்பத்தால் ஏற்படும் சோர்வை இது நீக்கும். பதநீர் வயிற்றுப் புண்ணை சரிசெய்யும். மலச்சிக்கலால் அவதிபடுபவர்களுக்கு பதநீர் நல்ல மருந்து. இதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கங்களை சரி செய்து ஜீரணம் சீராக நடக்க உதவும்.
பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமையாக்குகிறது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை தடுக்கிறது. பித்தத்தை குறைக்கிறது. ரத்த சோகையை போக்குகிறது. இனப்பெருக்க உறுப்புகளை புத்துணர்வோடு செயல்பட வைப்பதால் இல்லறம் சிறக்கிறது. எனவே பதநீர் பருகுவோம். உடல் நலனை பேணுவோம்!