
அந்தக் குளிரிலும் பஸ் நிலையம் அருகே ஒரு இளம் தம்பதியினர் தள்ளுவண்டியில் இட்லியும், டீயும் சுடச்சுட விற்றுக் கொண்டிருந்தார்கள். குளிருக்கு இதமாக நானும் ஒரு’அர்தா’ சாய் குடித்தேன்.
கர்நாடகாவில் டீ காபியிலும், ‘ஃபுல்’, ‘ஹாஃப்’ உண்டு. ‘அர்தா’ என்றால் பாதி! பெரும்பாலும் அங்குள்ள மக்கள் ‘அர்தா சாய்’தான் குடிப்பார்கள்.
‘அர்தா’வில் ஒரு மடக்கு டீ இருக்கும். அதுதான் அளவு.’ஃபுல்’லில் இரு மடக்கு டீ இருக்கும். அவ்வளவுதான்!
சுடச்சுட சுவையான டீ குளிருக்கு இதம் தந்தது. ‘எஷ்டூ?'(எவ்வளவு) என்றேன். ‘மூறு ரூபா கொடி’ (மூன்று ரூபாய் கொடுங்கள்) என்றார்கள். மூன்று ரூபாய்க்கு அது அற்புதமான டீ. நமது தமிழ்நாடாக இருந்திருந்தால் அந்த டீக்கு 10 ரூபாய் கறந்திருப்பார்கள்.
டீ விலையே பாதாமியை ஒரு நியாயமான ஊராக காட்டியது. ஒரு சாம்ராஜ்யத்தின் தலைநகரில் காலாற நடப்பதே அருமையான அனுபவம்தான். அதுவும் கல்கியின்’சிவகாமியின் சபதம்’ படித்தவர்களுக்கு பாதாமி மறக்கமுடியாத இடம்.
ஒரு நல்ல ஹோட்டல் தேடி அலைந்தேன். ஆனால் குளிர் தான் உடலை ஊசியாக குத்தியது. மொபைலில் டெம்பரேச்சர் பார்த்தேன்; 11 டிகிரி என்று காட்டியது. அந்த பேய்க்குளிருக்கான காரணம் அப்போதுதான் புரிந்தது.
நமது கொடைக்கானல், ஊட்டி குளிரை விட இங்கு அதிகம். குளிரைப் போலவே பாதாமியில் ஹோட்டல்களும் அதிகம். குளிரில் இருந்து தப்பிக்க ஒரு பட்ஜெட் ஹோட்டல் அறைக்குள் தஞ்சமடைந்தேன்.
![]() |
பாதாமி நகரம் |
முனிவர்களை ஏமாற்றி விருந்துக்கு அழைத்து, அந்த விருந்தில் வாதாபியே உணவாக மாறி முனிவர்கள் வயிற்றுக்குள் சென்று விடுவான். அதன்பின் இல்வலன் ‘வாதாபியே! வெளியே வா!’ என்று சொல்வான். உடனே முனிவரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான் வாதாபி. பிறகு இருவரும் சேர்ந்து இறந்த முனிவரை சாப்பிட்டு விடுவார்கள்.
இப்படித்தான் ஒருமுறை அகத்திய மாமுனி தென்திசை நோக்கி வரும்போது வாதாபி அவரை விருந்துக்கு அழைத்தான். விருந்தை உண்ட அகத்தியரிடம் வாதாபியின் மாயாஜாலம் பலிக்கவில்லை. வாதாபியை வயிற்றுக்குள்ளே ஜீரணித்து விட்டார். வெளியே இருந்த இல்வலனையும் சாம்பலாக்கி விட்டார்.
அகத்தியரின் அற்புத செயலால் அரக்கர்கள் தொல்லையில் இருந்து மக்கள் விடுபட்டனர். ஆனாலும் ‘வாதாபி’ என்ற அவன் பெயரே ஊருக்கு நிலைத்து விட்டது. பின்னாளில் வந்த மக்கள் ஒரு கொடிய அரக்கனின் பெயரிலா நம் ஊர் இருப்பது என்று நினைத்து, வாதாபியை பாதாமி என்று மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது.
![]() |
முதல் குகைக் கோயில் |
சாளுக்கியர்கள் கலையில் சளைத்தவர்கள் அல்ல. பாதாமி குகைக் கோயில்களை பார்ப்பதற்கு முன்பு வரை சாளுக்கியர்கள் எனக்கு வரலாற்று பாட புத்தகங்களில் மட்டுமே அறிமுகமாகியிருந்த ஒரு வம்சம். ஆனால் பாதாமி நகரில் அமைந்திருந்த பாதாமி குகை கோயில்கள், கோட்டைகளை பார்த்தப்பின் என் மனதில் சாளுக்கியர்கள் விஸ்வரூபம் எடுத்தார்கள். என்னவொரு கலையம்சம்! எல்லாமே கலைகளின் உச்சம்!
![]() |
அகஸ்திய ஏரி |
குளத்தில் இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லா பக்கங்களிலும் அமைந்திருந்தன. இப்படி ஒரு அழகு மிக்க இடமாக இது இருக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
பாறைகள் செம்மண் நிறத்தில் இருக்கின்றன. இப்படிப்பட்ட பாறைகளை தமிழ்நாட்டில் பார்ப்பது அபூர்வம். இந்த செந்நிற மலைகளைக் குடைந்து குடைந்தே நான்கு குகைக்கோயில்களை உருவாக்கியிருக்கிறார்கள் சாளுக்கியர்கள். ஒவ்வொன்றுமே பொக்கிஷம்தான்!
குளத்தின் தென்பகுதி மலையில் குகைக்கோயில்கள் வரிசையாக உள்ளன. முதல் குகைக்கோயில் சிவாலயம், மற்ற மூன்று குகைக்கோயில்களோடு ஒப்பிடுகையில் இதுதான் உயரம் குறைவானது. வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து அப்படியே கோயிலுக்குள் செல்லும் விதமாக மிக அருகில் இருக்கிறது. இந்த குகையின் முகப்பில் ஒரு நடராஜர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே வேறு எங்கும் பார்க்க முடியாத வடிவம் அது.
![]() |
84 முத்திரைகள் கொண்ட நடராஜர் சிற்பம் |
மண்டபத்துக்குள் சென்றால் மகிஷாசுர மர்த்தினி, கணபதி, கார்த்திகேயன் சிற்பங்கள் உள்ளன. சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை ஒரு பக்கமும் சிவனும் விஷ்ணுவும் இணைந்த ஹரிஹரன் சிற்பம் மறுபுறமும் உள்ளன. எல்லாமே கலையழகு!
இரண்டாவது குகைக்கோயில் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களை நமக்கு விளக்குகிறது. வராக அவதாரம், திரிவிக்ரம அவதாரம் பிரமாதமாக செதுக்கப்பட்டுள்ளன.
![]() |
மூன்றாவது குகைக்கோயில் |
![]() |
தூண்களில் தம்பதியர் சிற்பம் |
![]() |
மேற்கூரையில் தம்பதியர் சிற்பம் |
![]() |
மகாவீரர் |
![]() |
குகைக்கோயிலின் உட்புற கலையழகு |
![]() |
இப்படியொரு கற்தூணை வேறெங்கும் பார்த்ததில்லை |
பாரதிராஜாவின் ‘தாஜ்மஹால்’, ஜீவா நடித்த ‘வந்தான் வென்றான்’ படத்தில் வரும் ‘காஞ்சன மாலா’ பாடல், விஜய் சேதுபதி நடித்த ‘ரம்மி’ போன்ற சினிமா படங்கள் இந்த எழில் பிரதேசத்தில் எடுக்கப்பட்டது தான்.
![]() |
மலை மீதுள்ள சிவாலயம் |
![]() |
பூத நாத சிவன் கோயில் ஏரியிலிருந்து |
![]() |
பூத நாத சிவன் கோயில் கோட்டையிலிருந்து |
![]() |
மலை அடிவாரத்திலுள்ள சிவாலயம் |
![]() |
கோட்டையின் கண்காணிப்பு கோபுரம் |
![]() |
திப்பு சுல்தான் கட்டிய மசூதி |
![]() |
பாதாமி அருங்காட்சியகம் |
வாதாபியில் இரண்டு வித்தியாசமான சிற்பங்கள் இருந்திருக்கின்றன. ஒன்று கணபதி, மற்றொன்று லஜ்ஜாகெளரி. வாதாபி கணபதியை பல்லவ மன்னன் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துவிட்டார்.. ஆனால் லஜ்ஜாகெளரி கொண்டு வரப்படவில்லை.
![]() |
லஜ்ஜாகெளரி |
![]() |
கோட்டையிலுள்ள தூண்கள் |
பெங்களூரிலிருந்து 480 கி.மீ. தொலைவில் பாதாமி அமைந்துள்ளது. அருகிலிருக்கும் ஹூப்ளி நகரம் 105 கி.மீ. தொலைவில் உள்ளது. பாதாமி சாலை மற்றும் ரெயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து பாதாமிக்கு நேரடி எக்ஸ்பரஸ் ரயில்கள் உள்ளன. அருகில் இருக்கும் விமான நிலையம் ஹூப்ளி.
பாதாமியில் தங்குவதற்கு ஏகப்பட்ட ஹோட்டல்கள் இருக்கின்றன. ‘ஹோட்டல் மயூரா சாளுக்கியா’ (0835 – 7220046) சொகுசாக தங்குவதற்கு ஏற்ற இடம். இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.1,500. ‘ஹோட்டல் ஆனந்த் டீலக்ஸ்’ (08357 – 220074) பஸ் நிலையம் அருகில் உள்ளது. இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.800.