
தேவையான பொருள்கள்:
புடலங்காய்க் குடல் – 2 கப்
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2, 3
பச்சை மிளகாய் – 1
உளுத்தம் பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
பெருங்காயம்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
புடலங்காய் நறுக்கும்போது, உள்ளிருந்து நீக்கிய குடல் பகுதியை எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், புளி, என்ற வரிசையில் சேர்த்து சிவக்க வறுத்து எடுத்துவைத்துக் கொள்ளவும்.
தனியாக பச்சை மிளகாய், கறிவேப்பிலையுடன் புடலைக் குடலையும் நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கினால், லேசாகச் சுண்டி, தண்ணீர் விட்டிருக்கும்.
வறுத்த பருப்புக் கலவையை உப்பு சேர்த்து, அப்படியே தண்ணீர் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித் தழை, வதக்கிய குடல் பகுதியைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றினால் துவையல்.
இதே மாதிரி பரங்கிக்காய்க் குடல், பொடியாக நறுக்கிய சௌசௌ தோல், இளம் பீர்க்கங்காய் தோல், போன்றவற்றிலும் தனித்தனியாகவோ, இவைகளில் இரண்டு மூன்றை சேர்த்தோ செய்யலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நெய் சாதம், தேங்காய் சாதம். தயிர்சாதம்…..
புளி சேர்க்காமல் தேங்காய் சேர்த்து அரைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தால், சட்னி மாதிரி பொங்கல், உப்புமா, சப்பாத்தி வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.