Header Banner Advertisement

பேயோடு வாழ்க்கை நடத்தும் பெண்கள்


3

print
‘பேயை பார்த்ததுண்டா?’ என்று ஆண்களிடம் கேட்டுப் பாருங்களேன்.
உடனே ‘பேயை பார்ப்பதா..? 20 வருஷமா அதோடுதானே குடும்பம் நடத்துறேன்..!’ என்று அபத்தமான ஜோக் அடிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால், நிஜமாகவே பேயோடு குடும்பம் நடத்தும் பெண்கள் இருக்கிறர்கள்.

இறந்து போனவர்களை உயிரோடு இருப்பவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் சீனாவிலும் சூடானிலும் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் இந்த பழக்கம் இன்றும் தொடர்வதுதான் வேடிக்கை. இவர்கள் இப்படி பேயை திருமணம் செய்து கொள்வதற்கும் பல காரணங்களை வைத்திருக்கிறார்கள்.

ஒருவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணம் நடக்கும் முன்பே மணமகனோ அல்லது மணமகளோ இறந்து விட்டால், அவர்களின் சொத்தும் உறவுமுறைகளும் கை விட்டு போய் விடக்கூடாது என்பதற்காக இறந்து போனவரின் ஆவியோடு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

நம்மூரைப் போலவே இந்த மூடநம்பிக்கை திருமணங்களில் அதிகம் பாதிக்கப்படுவது அங்குள்ள பெண்கள்தான். ஊரைக்கூட்டி, விருந்து வைத்து, இறந்து போனவர்களோடு திருமணம் முடிந்த கையோடு, அந்த பெண்ணை விதவையாக்கி மூலையில் உட்கார வைத்து விடுவார்கள். வாழ்நாள் முழுவதும் விதவையாக மணமகனின் குடும்பத்தோடு, இல்லாத புருஷனை நினைத்துக்கொண்டு கண்ணீர் மல்க வாழ வேண்டும்.

இதுவே இறந்து போன மணமகளை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இப்படி சட்டங்களோ சடங்குகளோ கிடையாது. ஆவியோடு திருமணம் நடந்து முடிந்த நாலு நாட்கள் கழித்து உயிரோடு இருக்கும் இன்னொரு பெண்ணுடனான திருமணத்திற்கு நாள் குறித்து விடுவார்கள்.

விதவைப்பெண்கள் வாழ்வதற்காகவே ஊரின் ஒதுக்குப்புறமாக ஒரு விடுதி இருக்கும். அங்குதான் விதவைப்பெண்கள் தங்களின் கடைசி காலம் வரை வாழ்வை கழிக்க வேண்டும். சீனர்களின் குடும்ப அமைப்புப்படி திருமணம் ஆகாத பெண்களுக்கு சமூகத்தில் எந்த அந்தஸ்த்தும் கிடையாது.

வசதியற்று, ஏழ்மை காரணமாக திருமணம் ஆகாமலேயே இருக்கும். பெண்களை இதுபோன்று இறந்து போனவர்களோடு திருமணம் முடித்து மணமகன் குடும்பத்து உறுப்பினர் ஆக்கிவிடுவார்கள்.

இறந்து போனவர்களின் ஆவிகள் அவர்களின் குடும்பத்தினரின் கனவிலோ, அல்லது ஆள் மூலமாகவோ, “இங்கே நான் தனிமையில் தவிக்கிறேன். எனக்கு உடனே திருமணம் செய்து வையுங்கள்!” என்று கேட்குமாம். ஆவியின் வேண்டுகோளை தட்டாது, உடனே யாரவது ஒரு ஏழை அபலைப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

ஏதோ பேயக்குதானே திருமணம் செய்து வைக்கிறோம் என்று ஏனோதானோ திருமணம் நடத்தி விடமாட்டார்கள். பேய் திருமணங்களிலும் ஜாதகம் பார்த்தல், பொருத்தம் பார்த்தல், நிச்சயதார்த்தம், திருமண சடங்கு, வரதட்சணை என்று அத்தனை அம்சங்களும் உண்டு.

திருமணத்தின் போது மணப்பெண்ணின் அருகில் இறந்துபோனவரின் அடையாளமாக அருகில் துணியால் செய்யப்பட்ட ஒரு ஆண் பொம்மை இருக்கும். அதுதான் மணமகன். காலம் பூராவும் உயிரற்ற அந்த பொம்மையொடுதான் வாழவேண்டும். இதுதான் பேயை கட்டிக்கொண்டு வாழும் பெண்களின் நிலைமை..!