
தேவையான பொருள்கள்:
பச்சைப் பயறு – 1 கப்
பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)\
வெங்காயம் – 1 (விரும்பினால்)
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்
தாளிக்க: எண்ணெய், சீரகம்.
காய்கறி: வெங்காயம், கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை.
செய்முறை:
பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 12 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கலந்துகொள்ளவும்.
மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயைச் சூடாக்கி, அதில் மிகப் பொடியாக அரிந்த வெங்காயம், குடமிளகாய், பச்சை மிளகாய், துருவிய கேரட், லேசாய் நசுக்கிய பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
மேலே காய்கறிக் கலவையை சிறிது பரவலாகத் தூவவும், தோசைத் திருப்பியால் லேசாக ஒட்டிக்கொள்ளுமாறு அழுத்தவும்.
சுற்றி எண்ணெய் விட்டு முறுகலாக வேகவைக்கவும்.
திருப்பிப் போட்டு, மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும்.
அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும்.
காய்கறிக் கலவை மேலே தூவி தயாரிக்க சிரமப்படும் புதிதானவர்கள், மாவுக் கலவையிலேயே இந்த வதக்கிய கலவையைக் கலந்து செய்யலாம்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
நாம் மசால்தோசைக்கு உருளைக்கிழங்கு மசாலா நடுவில் வைத்துச் செய்வதுபோல இந்தத் தோசைக்கு நடுவில் கால் டீஸ்பூன் இஞ்சிச் சட்னியைத் தடவி, அதன்மேல் ஒரு சிறு கரண்டி ரவை உப்புமாவை வைத்து மடித்துப் பரிமாறவும். ரவை உப்புமா சன்ன ரவையில் செய்ததாகவும், சற்று தளர்வாகவும் இருந்தால் பொருத்தமாக இருக்கும். பெரிய ரவையாக இருந்தாலும் பரவாயில்லை.
தேங்காய்ச் சட்னி, சாம்பார் பொருத்தமாக இருக்கும்.