Header Banner Advertisement

மனிதக் கழிவில் தங்கம்


Untitled

print
போகிறப் போக்கைப் பார்த்தால் வருங்காலத்தில் மனிதக் கழிவுக்கு மிகப் பெரும் கிராக்கி எற்படும்போல..! ஏற்கனவே மனிதனின் சிறுநீர் பயிர்களுக்கு நல்ல உரம் என்று கண்டுபிடித்தார்கள். அதனால் வெளிநாடுகளில் பயிர்களுக்கு நல்ல உரமாக சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. மனித சிறுநீரில் ஜிப்சம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நைட்ரஜன் ஆகிய தனிமங்கள் இருப்பதால் வெளிநாடுகளில் சிறுநீரை செடிகளுக்கு உரமாக பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
இப்போது அதன் தொடர்ச்சியாக மனிதக் கழிவில் தங்கம் உட்பட பல விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மண்ணியல் ஆய்வு அமைப்பை சேர்ந்த டாக்டர் கேத்லீன் ஸ்மித் என்பவர் கடந்த 8 வருடங்களாக இது குறித்து ஆய்வு செய்துவருகிறார்.

அவர் அமெரிக்காவின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வரும் கழிவுகளில் எந்த அளவுக்கு தங்கம் இருக்கிறது என்பது குறித்த தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த ஆய்வின் முடிவு இப்போது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

பாறைகளில் காணப்படும் குறைந்த அளவு தங்கம் மனிதக் கழிவிலும் இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் வெள்ளி, பலேடியம் மற்றும் வெனேடியம் போன்ற அபூர்வத் தாதுப் பொருட்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்களின் கவனம் மனிதக் கழிவு மீது திரும்பியுள்ளது,

இந்த ஆய்வுகள் எல்லாம் அமெரிக்காவில் நடைபெற்றதால் அமெரிக்கர்களை மையமாக வைத்தே எல்லா முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 10 லட்சம் அமெரிக்கர்களின் கழிவில் இருந்து ரூ.84.5 கோடி மதிப்பிலான தங்கம் போன்ற உலோகங்கள் பெறமுடியும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. 10 லட்ச மக்களுக்கே இப்படியென்றால், 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

இப்படி மனிதக் கழிவிலிருந்து கனிமங்களை பிரித்தெடுப்பதால் அவற்றின் மூலம் சுற்றுச்சூழலில் ஏற்படும் நச்சுத்தன்மை குறையும் என்ற நமையும் இதில் இருக்கிறது. அதனால், இப்போதே சுற்றுச்சூழல் வல்லுனர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் அமெரிக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து 70 லட்சம் டன்கள் திடக் கழிவுகள் வெளியாகின்றன. அவற்றில் பாதியளவு வயல் மற்றும் காடுகளில் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. எஞ்சியவை எரிக்கப்பட்டு நிலத்தை சமன் செய்ய உபயோகப்படுத்தப்படுன்றன. யார்கண்டது வருங்காலத்தில் பொது கழிவறைகள் ‘அல்ட்ரா’ மாடர்னாக இருக்கும். சிறுநீர் கழிக்க பணம் வாங்கிய நிலைமை மாறி பணம் கொடுக்கும் நிலை உருவாகலாம். வெளிநாடுகளில் தற்போது 20 லிட்டர் சிறுநீர் ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.