‘ரியோ-கார்னிவல்’
ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான உதடுகள் உச்சரிக்கும் உற்சாக வார்த்தை இந்த ‘ரியோ-கார்னிவல்’. எப்போது பிப்ரவரி மாதம் வரும் பிரேசில் போவோம் என்று ரசிகர் கூட்டம் ஏங்கி தவிக்கும் திருவிழா இது.
கொண்டாட்டங்கள் எல்லாமே மேல்தட்டு மக்களை மகிழ்விக்க வடிவமைக்கப் பட்டவைகள்தான். விதிவிலக்காக பல திருவிழாக்கள் சாமானியர்களையும் மகிழ்விக்கின்றன. இதில் ரியோ-கார்னிவல் இன்னும் ஸ்பெஷல் இது மகிழ்வித்தது அடிமைகளை..!
அன்றைய மனித அடிமைகளை மகிழ்வித்திருக்கிறது. அவர்களின் கட்டற்ற சுதந்திர கொண்டாட்டத்தை அதிகார வர்க்கம் கேள்வியே இல்லாமல் அங்கீகரித்திருக்கிறது. அந்த உற்சாகம் நூற்றாண்டைக் கடந்து இன்றும் இளமைத் துள்ளலோடு அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உற்சாகம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் தெரிய வேண்டுமானால் ரியோ-கார்னிவலுக்கு ஒருமுறை போய் வர வேண்டும்.
வண்ணங்களையும், உற்சாகத்தையும் கொட்டி உருவாக்கிய கொண்டாட்டம்தான் இந்த ரியோ கார்னிவல். இதில் காணப்படும் உல்லாசம் வேறெங்கும் காணமுடியாதது. வெறும் நான்கு நாட்கள் நடக்கும் திருவிழாவுக்காக வருடம் முழுவதும் ஏக்கத்தோடு காத்துக்கிடக்கிறார்கள், பார்வையாளர்கள். இதைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 5 லட்சம் மக்கள் விமானம் ஏறுகிறார்கள்.
ரியோ திருவிழா ஒவ்வொரு வருடமும் ‘ஈஸ்ட்டர் தினம்’ வருவதற்கு 40 நாட்களுக்கு முன் தொடங்குகிறது. பிப்ரவரியில் களைக்கட்டுகிறது. இதுவொரு பாரம்பரியத் திருவிழா. இதன் தொடக்கம் கிரேக்கர்களிடம் இருந்து வந்தது.
கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களிடம் வசந்த காலத்தை வரவேற்று வழிபடும் முறை இருந்தது. இதுவே பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளில் நன்றி சொல்லும் திருவிழாவாக வேறு வடிவம் கொண்டிருந்தது. முகத்தில் முகமூடியை அணிந்து கொண்டு வீதிகளில் ஆடிவரும் முறை அப்போது உருவானதுதான்.
பாரீஸில் இதுபோன்ற ஒரு திருவிழாவைப் பார்த்து பரவசம் அடைந்த வணிகர்கள் கி.பி.1750-ல் பிரேசிலுக்கு இறக்குமதி செய்துவிட்டார்கள். அப்போது பிரேசில் போர்ச்சுக்கல் கையில் இருந்தது. இந்த திருவிழாவை வித்தியாசமாக வடிவமைக்க நினைத்தார்கள்.
ஏழை – பணக்காரன், உயர்ந்தோர் – தாழ்ந்தோர் வித்தியாசம் இல்லாத திருவிழாவாக இது உருவாக்கப்பட்டது. ஆண்டான் – அடிமை முறை திருவிழா நேரத்தில் மட்டும் ரத்து செய்யப்பட்டது. திருவிழாவில் அரச குடும்பத்தினர் சாதாரண மக்கள் போல் ஏழைகள் உடை அணிந்து வருவதும், அடிமைகளும் சாதாரண மக்களும் மகாராணி உடையில் வருவதும் சகஜமாக நடந்தது. இப்படி ஒரு நடைமுறை வேறு எந்த திருவிழாவிலும் இல்லை.
சமூக ஏற்றத் தாழ்வுகள் இல்லாத இந்த நான்கு நாள் திருவிழா அன்றைக்கு ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாக விலைக்கு வாங்கப்பட்டு வந்திருந்த கறுப்பர்களுக்கு சொர்க்கமாக தெரிந்தது. நான்கு நாள் திருவிழாவை தங்கள் வாழ்வில் கிடைத்த பொக்கிஷமாக கருதினார்கள். அடிமை நிலையை மறந்த கருப்பர்கள் திருவிழாவில் கட்டுக்கடங்காத களியாட்டம் ஆடினார்கள்.
அதில் தங்களின் பூர்விக இசையான ‘சம்பா’ இசையையும் நடனத்தையும் சேர்த்துக் கொண்டார்கள். குழுவாக சேர்ந்து ஆடும் இந்த நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த திருவிழாவில் பிரேசில் மக்களை விட ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களே அதிகம் கலந்து கொண்டார்கள். இப்போதும் கூட ரியோ-கார்னிவலில் அவர்களின் பங்களிப்புதான் அதிகம்.
19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரியோ திருவிழா வேறு வடிவம் கொண்டது. இதில் கலந்து கொள்ளும் குழுக்களுக்கு இடையே போட்டி உருவானது. இந்தப் போட்டி இசை நடனத்தோடு நின்று விடவில்லை. விதவிதமாக உடையோடு வித்தியாசமான வேடங்கள், ஆர்கெஸ்ட்ரா என்று அனைத்திலும் கடுமையான போட்டி ஏற்பட்டது. இந்த போட்டி மனப்பான்மைதான் ரியோ திருவிழாவை எங்கேயோ உச்சத்துக்குக் கொண்டு போனது. பிரமாண்டம் உருவானது.
நான்கு நாட்கள் திருவிழாவில் குழுநடனம் இருக்கிறது. மாறுவேட நடனம் உள்ளது. நமது குடியரசு தினத்தில் டெல்லி வீதிகளில் அணிவகுத்துவரும் கவச வண்டிகள் போல் இங்கு விதவிதமாக அலங்காரித்த பிரமாண்டமான வாகனங்கள் அணிவகுத்து வருவதை பார்த்து பரவசப்பட இரண்டு கண்கள் போதாது.
சாமானிய பெண்கள் மகாராணியாக வலம் வரும் வைபவமும் இங்கு கோலாகலமாக நடைபெறுகிறது. அதற்கு ‘குயின்ஸ் ஆஃப் கார்னிவல்’ என்று பெயர். மகாராணிகள் தங்களின் மார்பக அழகை வெளிக்காட்டுவது அந்தஸ்தின் அடையாளமாக மேலைநாடுகளில் இருக்கிறது. அதனாலே இங்கு மகாராணிகளாக வலம் வரும் பெண்களும் திறந்த மார்பகங்களோடும் கட்டற்ற சுதந்திரத்தோடும் வெறித்தனமான ஆட்டம் போடுகிறார்கள்.
ரியோ-கார்னிவல் என்பது வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல. உண்மையான பிரேசிலின் கலையையும் பண்பாட்டையும் கற்றுக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.
ரியோ திருவிழாவுக்கான ஆயத்த வேலைகள் புது வருடம் பிறந்ததுமே தொடங்கிவிடுகின்றன. ‘கிங் மோமோ முடிசூட்டு விழா’வுடன் கார்னிவல் கலைக்கட்டத் தொடங்குகிறது. அந்த அரசர் வெள்ளி மற்றும் தங்கத்தால் ஆன சாவியை நகர மேயரிடம் ஒப்படைப்பார். அதுதான் விழா தொடக்கத்திற்கான அழைப்பு.
அழைப்பு கிடைத்தவுடன் தெருக்கள், சதுக்கங்கள், பார்கள், கிளப்புகள் என்று எல்லா இடங்களிலும் திருவிழா ஜுரம் பற்றிக் கொள்ளும். சம்பா நடனங்களை சொல்லித்தர சம்பா பள்ளிகள் இருக்கின்றன. இங்கு தீம் மியூசிக், பாடல்கள் அதற்கான ஒப்பனைகள், நடனங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
இங்கு ‘ஸ்ட்ரீட் பேண்ட்’ என்ற வீதியோர இசைக்குழுக்கள் 300-க்கும் மேல் இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் இந்தக் குழுக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. திருவிழா பேரணிக்காக இவர்கள் தயாராகும் ஆரம்பக்கட்ட நிகழ்ச்சிகள் அற்புதமானவை.
இவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட சாலைகளில் தங்கள் ஆர்கெஸ்ட்ராக்களுடன் சம்பாவுக்கு உண்டான ஆடைகளுடன் கவர்ச்சியாக வலம் வந்து கூட்டத்தினரை வசீகரிப்பார்கள். இந்த வார்ம்-அப் நிகழ்ச்சி தவறவிடக் கூடாத ஒன்று.
வருகிற 2017 ரியோ கார்னிவலுக்கு போகவேண்டும் என்றால் இப்போதே திட்டமிடுங்கள். அதுவொரு அற்புத அனுபவத்தை தரும். எதற்கும் பட்ஜெட்டாக ஒரு 5 லட்ச ரூபாயை தனியாக ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

சில படங்கள் மிகக் கவர்ச்சியாக தெரியலாம். அதில் உள்ள கலையம்சத்திற்காகவே பயன்படுத்தப் பட்டுள்ளது.
படங்கள்: கூகுள் இமேஜ்