
மாணவர்கள் நினைத்தால் ஆட்சியை கூட மாற்றமுடியும் என்று உலகுக்கு உணர்த்திய நாடு இந்தியா. இந்த புரட்சி நடந்தது அசாம் மாநிலத்தில்.
லட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவிலே தங்கிவிட்டதால் மண்ணின் மைந்தர்களான அசாமியர்களுக்கு வேலை கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டன. அதனால், அகதிகளாக வந்தவர்கள் மீண்டும் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையோடு உருவானதுதான் ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’.
மாநில அரசால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் மாநிலம் வந்தது. இந்த நிலையில் 1983-ம் ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே வேளையில் அகதிகளாக வந்திருந்த 30 லட்சம் பேரும் அசாம் மாநில வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தனர்.
இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டுத்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், மீறி நடத்தினால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அசாம் மாணவர் சங்கம் அறிவித்தது. ஆனால், இதையெல்லாம் இந்திய அரசு காதில் வாங்கவில்லை. ராணுவ அடக்குமுறையோடு தேர்தலை நடத்தியது.
தேர்தலை புறக்கணிக்குமாறு மாணவர் சங்கம் எச்சரிக்கை விட்டது. வெறும் 32 சதவிகித வாக்குகளே பதிவானது. பெரும்பாலான வாக்குசாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. தேர்தல் நடந்த 109 தொகுதிகளில் 91 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது.
அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைந்தன. தினமும் சராசரியாக 25 பேர் கொல்லப்பட்டனர். 1984-ல் இந்திரா காந்தி மறைவிற்கு பின், பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, அசாம் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மாணவர் சங்கங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அதன்படி 10 லட்சம் பேர்களின் வாக்கு பறிக்கப்பட்டது. காங்கிரஸ் பதவி விலகியது.
உலகில் வேறு எங்கும் இப்படியொரு புரட்சி நடந்ததில்லை. மாணவர்களின் போராட்டத்தால் ஆட்சியை மாற்றி காட்டியதும் இல்லை.
அசாம் கன பரிஷத் தேர்தல் அரசியலை ஏற்று ஆட்சிக்கு வந்ததும் பரிதாபமாக சீரழிந்து போயின. அதன் பின்னடைவுகளிலிருந்து அசாம் மக்கள் இன்னும் மீட்கப்படவில்லை.