Header Banner Advertisement

வற்றல் குழம்பு செய்முறை


%e0%ae%b5%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81

print

வற்றல் குழம்பு செய்வதில் இது ஒரு முறை. இதை சுண்டைக்காய் வற்றல் குழம்புக்கான குறிப்பாகக் கொடுத்திருக்கிறேன். ஆனால் இதே முறையில் மணத்தக்காளி வற்றல், மினுக்கு வத்தல், வெண்டை, கொத்தவரங்காய், பாகற்காய் வற்றல்களிலும் செய்யலாம். நான் இரண்டு மூன்றை சேர்த்துப் போட்டும் செய்வேன்.

சுண்டைக்காய் வத்தக் குழம்பு

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
சுண்டைக்காய் வற்றல் – 20 *
வற்றல் குழம்புப் பொடி – 1 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு
வெல்லம் – சிறிது (விரும்பினால்)

தாளிக்க – கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை:
புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, முதலில் வற்றலை வறுத்துக் கொள்ளவும்.
அதன்மேலே கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்துத் தாளிக்கவும்.
மேலே வற்றல் குழம்புப் பொடியைப் போட்டு வறுத்துக் கொண்டு, புளிநீரைச் சேர்க்கவும். (வாசனை தூக்குகிறதா?)

உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கெட்டியாக இறுகி, பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

விரும்பினால் இறக்கும் முன் ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்கவும். நோ கொத்தமல்லித் தழை.
வற்றல் குழம்புப் பொடி இல்லாவிடில் அன்றாடம் உபயோகிக்கும் சாம்பார்ப் பொடியையே உபயோகிக்கலாம்.

சுண்டைக்காயில் இரும்புச் சத்து மிகுதியாக உள்ளது. வறட்டு இருமல், ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுப் பூச்சியினால் ஏற்படும் வலி, சிறுநீர்ப் பிரச்சினை என பலவற்றிற்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. காரணம் தெரியாமல் திடீரென வயிற்றுவலி வந்தால், சுண்டைக்காயை எண்ணையில் வறுத்து, நெய், உப்புடன் சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டுப் பார்க்கவும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

சாதத்தோடு பிசைந்து சாப்பிட, குழம்பு கெட்டியாக புளிக்காய்ச்சல் மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் சாதம் கலக்க மேலும் ஒருபங்கு தண்ணீர் அதிகமாக வைத்து நீர்க்கச் செய்வதே சரி.. சூடான சாதத்தில் நெய், நல்லெண்ணை, வற்றல் குழம்பைச் சேர்த்து வேகமாகக் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். கலப்பதற்கு முன் முடிந்தால் மிளகாய், சுண்டைக்காய் வற்றலை தனியாக எடுத்துவைத்துக் கொண்டு கலக்கவும். கலந்தபின் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம். மிளகாயோ, வற்றலோ சாதத்தில் சிதைந்தால் சுவை கெடும்.

பயத்தம் பருப்பு சேர்த்த கூட்டு அல்லது காரம் அதிகம் இல்லாத கூட்டு வகைகள், சுட்ட அப்பளம், பொரித்த வடாம் வகைகள். கீரை மசியல் அல்லது கீரைக் கூட்டு எல்லாவற்றையும் மிஞ்சும்.

==========================================================

மணத்தக்காளி வத்தக் குழம்பு

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
தேங்காய் – அரை மூடி
நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன்
மணத்தக்காளி வற்றல் – 2 டேபிள்ஸ்பூன் *
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு
வெல்லம் – சிறிது (விரும்பினால்)

தாளிக்க:

நல்லெண்ணை – 4 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6,7
துவரம் பருப்பு – 3 டீஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உளுந்து அப்பளம் – 1
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

புளியை 2,3 தடவைகளாக நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.

தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து விழுது மாதிரி அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, பெருங்காயம், சீரகத்தைத் தாளித்துக் கொள்ளவும்.

இதில் ஒரு உளுந்து அப்பளத்தை 4,5 ஆக உடைத்துப் போட்டு, பொரிந்ததும் மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

புளித் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

மற்றொரு வாணலியில் மீதி இருக்கும் 2 டேபிள்ஸ்பூன் எண்ணையில் மணத்தக்காளி வற்றலைச் சிவக்க வறுத்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வதக்கிய கலவையை கொதிக்கத் தொடங்கியிருக்கும் புளித் தண்ணீரில் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.

மணத்தக்காளிக் குழம்பை இரவு வேளைகளில் சாப்பிடுவதால், அதீத வேலையால் ஏற்படும் உடல் வலியைப் போக்கி, களைப்பை விரட்டி, நல்ல தூக்கத்தையும், மறுநாள் உற்சாகத்தையும் கொடுக்கும்.

மணத்தக்காளி பெண்களுக்கு வரப்பிரசாதம். கருப்பை சம்பந்தப்பட்ட கோளாறுகளை நீக்குகிறது. தாய்ப்பால் ஊற மணத்தக்காளி அருமருந்து. பிரசவ காலங்களில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

பொதுவாகவே வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு வற்றல் குழம்பு செய்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.