Header Banner Advertisement

வானின் நிறம் கருப்பு


327756433-star-celestial-body-globe-object-earth-planet-light-pollution

print

வானத்தின் நிறம் என்ன? என்று கேட்டால் சின்னக்குழந்தை கூட சரியாக சொல்லிவிடும், நீலநிறம் என்று. இதுவே செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதாக வைத்துக்கொள்வோம். அவனிடமும் இதே கேள்வியை கேட்டால் அவன் வானின் நிறம் சிவப்பு என்பான். அதே வானத்தை நிலவில் இருந்து பார்த்தால் அதன் நிறம் கருமையாக இருக்கும். அப்படியென்றால் வானின் நிறம்தான் என்ன?

பூமியில் கூட வானம் நிறம் மாறுகிறது. தெளிவான வானம் அழகான நீலநிறத்தில் ஒளிர்கிறது. மாலையில் சூரியன் மறையும் போதும் காலையில் உதிக்கும்போதும் வானம் இளஞ்சிவப்பாக மாறுகிறது. இப்போது வானின் நிறம் என்ன?

நிறத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் ஒளியின் குணாதிசயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். ஒளியானது ஒளிகடத்தல், பிரதிபலித்தல், உட்கவர்தல் என்று மூன்று வகையான வினைபுரிகிறது. ஒரு பொருளின் ஊடே ஒளி ஊடுருவிச்செல்வதை ஒளி கடத்தப்படுகிறது என்கிறோம். கண்ணாடி முதலியவை ஒளியை கடத்துகிறது.

சில பொருட்கள் ஒளியை திருப்பி அனுப்புகிறது. இதனை ஒளி பிரதிபலிப்பு என்கிறார்கள். முகம் பார்க்கும் கண்ணாடி நேர் எதிராக பிரதிபலிக்கிறது. மற்ற பொருட்கள் எல்லாத்திசைகளிலும் ஒளியை சிதறி பிரதிபலிக்கிறது.

ஒளியை உட்கவருவதால்தான் நமக்கு பொருளின் நிறம் தெரிகிறது. எல்லா நிறங்களும் பச்சை இலை மீது விழுந்தாலும் பச்சை நிறத்தை தவிர மற்ற எல்லா நிறத்தையும் இலை உட்கிரகித்துக் கொள்கிறது. பச்சை நிரத்தைமட்டும் நன்கு பிரதிபலிக்கிறது. அதனால்தான் இலை பச்சையாக தெரிகிறது.

சூரிய ஒளியும் விண்வெளியில் பயணம் செய்து பூமியின் வளிமண்டலத்தை அடைகிறது. அங்கிருக்கும் காற்றில் ஏகப்பட்ட மூலக்கூறுகள் இருக்கின்றன. அவை சில குறிப்பிட்ட அலைநீளங்களை மட்டும் பிரதிபலிக்கின்றன. மற்றவற்றில் தாக்கம் ஏதும் செலுத்தாது கடந்து போக அனுமதிக்கின்றன. பூமியின் வளிமண்டலம் நீலநிற அலைநீளத்தின் ஒளியை அதிகமாக சிதற செய்கிறது. அதனால் வானம் நீலநிறமாக தெரிகிறது.

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் சிவப்பு நிற தூசு தும்புகள் நிரம்பியதாக உள்ளது. இவைகளின் போதிய அளவு இல்லாததால் ஒளிச்சிதறல் ஏற்படுவது இல்லை. அதனால் செவ்வாயின் வானம் இளஞ்சிவப்பாக தெரிகிறது. நிலவில் வளிமண்டலமே கிடையாது. அதனால் ஒளிச்சிதறலும் கிடையாது. அதனால் கருமையாக தெரிகிறது.

கருமை என்பது நிறமல்ல. ஒளியின் பார்வையில் ஒளியற்ற வெற்றிடத்தையே கருமை என்று சொல்கிறார்கள். எந்த நிற அலைகளும் சிதறாத வானம் நிலவில் இருப்பதால் அங்கு வானத்தில் சூரியன் நட்சத்திரங்களை ஒரே நேரத்தில் பார்க்கலாம்.

உண்மையில் வானின் நிறம் ஒளியற்ற வெற்றிடமான கருமைதான். பூமியின் வளி மண்டலத்தை கடந்தால் அதை பார்க்கலாம்.