Header Banner Advertisement

ஸாமீ! எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ!


001

print

ஸாமீ! எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ!

அப்போது நம்முடைய ஸ்ரீமடம் கும்பகோணத்தில் இருந்த ஸமயம் ! ஒருநாள் ஸ்ரீ சந்த்ரமௌலீஶ்வர பூஜை முடிந்து, தீர்த்த ப்ரஸாதம் குடுத்துவிட்டு, சிலருடன் பேசிக் கொண்டிருந்தார் நம் பெரியவா.

“ஸாமீ!….தெய்வமே!…..எம் மவனை காப்பாத்துங்க ஸாமீ !…”

திடீரென்று ஒரு குடியானவ பக்தர் அலறிக் கொண்டே பெரியவாளிடம் ஓடிவந்து, பாதங்களில் விழுந்து அழுதார்!

“என்னப்பா?…என்னாச்சு?…..”

“ஸாமீ ! எனக்கு ஒரே ஒரு மவன்….கறியாப்பில [கறிவேப்பிலை] கொத்தாட்டம்! வயல்ல ஸாப்பாடு ஸாப்ட்டுகிட்டு இருந்தான் ஸாமீ! அவனை பாம்பு கடிச்சிருச்சு ஸாமீ !……”

“ஸெரியா சொல்லு…..பாம்பு கடிச்சுதா?…..”

“மயக்கம் போட்டு விளுந்துட்டான் ஸாமீ! பாம்புக் கடிக்கி, மந்திரிக்கிறவங்க யாருமே இங்க இல்லீங்க ஸாமீ! காப்பாத்துங்க தெய்வமே!…”

பெரியவா எதுவும் பேசாமல், அவருடைய கையில் விபூதியைப் போட்டார்.

“பையனோட நெத்தில பூசு…..”

“ஸெரிங்க….”

“வீட்டுல அரப்பு, சீயக்கா பொடி இருக்கா?…”

“இருக்குங்க ஸாமீ !……”

“பையனோட ஒதட்டை பிரிச்சு, அவனோட வாய்ல, அரப்பு பொடியை தடவு! அவன் கசக்கறது-ன்னு துப்பினா….பாம்பு கடிக்கலேன்னு அர்த்தம்; திதிக்கறது-ன்னு சொன்னா….பாம்பு கடிச்சிருக்குன்னு அர்த்தம்; அதுக்கான வைத்யம் பண்ணணும்….”

“கடவுளே! எம்மவன் பொளைப்பானா?…”

“மொதல்ல போய் அரப்பு பொடிய குடு…..”

குடியானவர் ஓடிப்போய், பையனின் வாயில் அரப்புப் பொடியை தடவினார்……

“ஐயே!….கசக்குதுப்பா…..!..”

துப்பினான்!

அப்பாக்காரருக்கு பெரிய நிம்மதி!

“பாம்பு கடிக்கலடா…!….ஸாமீ காப்பாத்திட்டாரு…”

உடனே பையன் நெற்றியில் பெரியவா குடுத்த விபூதியைப் பூசிவிட்டு, அன்று மாலையே, மனைவியையும், மகனையும் பெரியவாளை தர்ப்பனம் பண்ண அழைத்துக் கொண்டு வந்தார்.

“இவனை பாம்பு கடிக்கல….பயப்டாதே! மேல ஏறி ஊர்ந்து போயிருக்கு! அவ்ளோதான்….பயத்ல மயக்கம் போட்டு விழுந்துட்டான்!….வீட்ல, தெனோமும் நல்லெண்ணெய் விட்டு, வெளக்கு ஏத்தி வை!…”

பையனின் அம்மாவிடம் சொன்னார்.

பாம்பு கடித்திருக்கிறதா? இல்லையா? என்பதை சுளுவாக, ஊர்ஜிதப்படுத்தப்படுத்திக் கொள்ள, என்ன ஒரு ஸிம்பிளான test! இந்தக் காலத்தில், shampoo-வை வாயில் விட்டு test பண்ண முடியுமா? அப்படிப் பண்ணினால், பாம்பு நிஜமாகவே கடித்திருக்காவிட்டால் கூட, கடித்த மாதிரி நுரை வந்து இன்னும் பயமுறுத்தும்.

நல்லபாம்பு நிறைய நடமாடும் இடத்தில், நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால், பாம்பு எதுவும் செய்யாது என்பதை பலமுறை பெரியவா சொல்லியிருக்கிறார்.